Show all

நாளை மறுநாள் வெளியாகும் பிரபல கதைத்தலைவர்களின் ஆறுபடங்கள்! நடித்தவர் யார், யார்? படங்கள் என்னென்ன?

04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாளை சீதக்காதி, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தனுசின் மாரி 2, ஜெயம் ரவியின் அடங்க மறு உள்பட மொத்தம் ஆறு படங்கள் வெளியாக இருப்பதால் பிரபல கதைத்தலைவர்களுக்கு வசூல் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் திரையுலகில், ஒவ்வொரு கிழமையும் ஏதாவது ஒரு படம் திரைக்கு வருவது வழக்கம். இதில், பிரபல கதைத்தலைவர்கள் படம் என்றால், அந்த ஒரு படம் மட்டும் திரைக்கு வரும். இதுவே சாதாரண நடுத்தர கதைத்தலைவர்களின் படம் என்றால், அதோடு மேலும், சில படங்கள் திரைக்கு வருவது வழக்கம். அண்மையில், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 2.0 படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதோடு, ரூ.400 கோடிக்கும் அதிகமாகவே தொடக்க வசூல் அள்ளியது.

இந்த நிலையில், அடுத்த மாதத்தில் தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவும். இந்த மாதத்திலேயே கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு, என தொடர்ந்து விழா விடுமுறை தமிழ்த் திரையுலகிற்கு கொண்டாட்டம்தாம். இதன் காரணமாக இந்த மாதம், தனுஷ், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, அதர்வா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரது படங்கள் திரைக்கு வருகின்றன. கேஜிஎப் என்ற கன்னட படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. இதில், யாஷ் என்பவர் கதைத்தலைவனாக நடித்துள்ளார். 

முதலாவதாக, சீதக்காதி நாளை திரைக்கு வருகிறது. விக்ரமைப் போன்று கதாபாத்திரத்திற்கு ஏற்ப உடல் எடையை கூட்டி குறைத்து நடிப்பவர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். ஆரஞ்சு மிட்டாய், ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன், சீதக்காதி என்று பல படங்களில் கதாபாத்திற்கு ஏற்ப உடல் எடையை கூட்டி குறைத்து நடித்து வருகிறார்.

இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி (அய்யா ஆதிமூலம்), அர்ச்சனா, ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர், ராஜ்குமார், மௌலி, மகேந்திரன் பகவதி பெருமாள், கருணா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். 

இது விஜய் சேதுபதியின் 25ஆவது படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வயதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். படத்தில் நடிகராக இருக்கும் இவர், திரைப்படத்தில் தொடர்ந்து நடிக்கிறாரா? இல்லையா? வயதான பிறகு என்ன செய்கிறார்? என்ற கதைக்களத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக, அடுத்த படம் மாரி2. இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு வெளியாகி, வென்ற படம் மாரி. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் 2ம் பாகம் மாரி 2 என்று உருவாகியுள்ளது.

இப்படத்தையும் பாலாஜி மோகன் தான் இயக்குகிறார். ஆனால், காஜல் அகர்வாலுக்குப் பதிலாக பிரேமம் புகழ் சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கல்லூரி வினோத் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் புறா பந்தயம் வைத்து விளையாடும் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. அதே போன்று தான் இப்படமும் உருவாகியுள்ளது.

மூன்றாவதான படம் அடங்க மறு. கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில், ஜெயம் ரவி, ராஷி கண்ணா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம். சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் பதாகை நிறுவனத்தின் மூலம் சுஜாதா விஜயகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவி காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இதற்கு முன்னதாக, பேராண்மை, தனி ஒருவன், மிருதன், போகன் ஆகிய படங்களில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

ஆனால், வழக்கமான காவலராக இல்லாமல், இப்படத்தில் சற்று வித்தியாசமான் காவலராக யாருக்கும் அடங்காத காவலராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் காவல் துறையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்று கூறப்படுகிறது.

நான்காவதாக சிலுக்குவார்பட்டி சிங்கம். செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விசால் நடிப்பில் உருவாகியுள்ள படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இப்படத்தில் ஓவியா, யோகி பாபு, லிவிங்ஸ்டன், மன்சூர் அலி கான், சிங்கமுத்து, கருணாகரன், ரெஜினா கஸாண்ட்ரா, சாய் ரவி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். நகைச்சுவை படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவதாக, கனா. அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன், இளவரசு, பிளேடு சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கனா. இப்படத்தை சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இப்படம் சாதிக்க துடிக்கும் மகளுக்கும், தந்தைக்கும் இடையிலான கதையைக் கொண்டுள்ளது.

ஆறாவதாக கேஜிஎப். கன்னட இயக்குனர் பிராசாந்த் நீள் இயக்கத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் கேஜிஎப் இந்தப் படத்தின் நாயகியாக சிறிநிதி செட்டி அறிமுகமாகியுள்ளார். மேலும் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மாளவிகா அவினாஷ், தமன்னா, அனந்த் நாக், வசிஸ்டா என்.சிம்ஹா ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,006.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.