Show all

கடவுள் நமது வேண்டலை நிறைவேற்றித்தர ஏதாவது கேட்குமா? அப்படியான கேட்பு இயல்பானதா?

கடவுளிடம் போய் எனக்கு இதைச் செய்து கொடு, உனக்கு நான் அதைச் செய்கிறேன், உண்டியலில் தங்கம் போடுகிறேன் என்றெல்லாம் வேண்டுவதை எப்படி பார்க்கிறீர்கள்? கடவுளையும் அரசியல்வாதியாக மாற்றுகிற மாதிரி தெரியவில்லையா? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

03,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5125. 

இதுவரை உங்களுக்குக் கிடைத்தது அனைத்தும் நீங்கள் கேட்டது மட்டுமே என்பதை நீங்கள் உறுதியாக ஒப்புக் கொள்ள முடியும். ஒவ்வொரு தற்பரை நேரமும் உங்கள் செயலும் எண்ணமும், தமிழும் (உங்கள் மொழி) கடவுளில் பதிவாகிக் கொண்டுதான் இருக்கிறது என்கிற நிலையில் நீங்கள் கேட்டது கடவுளிடமே.

நீங்கள் கேட்டது கிடைப்பதற்கு கடவுள் அது தொடர்பான சில வேலைகளைக் கேட்கும். அதை நீங்கள் முடிக்கும் போது நீங்கள் கேட்டது கிடைத்துவிடும்.

கடவுள் என்கிற- வெளி, விண்வெளி, விசும்பு என்கிற மூன்று நிலைகளும், இறை என்கிற- நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கும், ஆற்றல் மூலங்களே என்கிற போதும், அவற்றை தெய்வமாக வழிபடுவது தமிழர் மரபு ஆகும்.

வழிபாட்டு மூலங்களுக்கான தெய்வங்களுக்குக் கட்டப்படுவனவே கோயில்கள். கோயிலுக்குப் போவது, உண்டியலில் காணிக்கை செலுத்துவது எல்லாம் சில பல அடையாளச் செயல்பாடுகளும், கடவுள் உங்களுக்குக் கொடுத்ததை கொண்டாடி மகிழ்வதற்குமான வழிபாட்டு முறைகளே ஆகும்.

கடவுளிடம் நீங்கள் என்ன கேட்க வேண்டும் எப்படி கேட்கவேண்டும் என்று சிந்திந்திருப்பதே முதன்மைக்கானது. ஆனாலும் இரண்டாவதைப் பேரளவாகக் கொண்டாடுவது நடைமுறையில் இருப்பதற்கு காரணம்: 
1. தமிழ்முன்னோர் மூன்றாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில் நிறுவிச்சென்ற, 'நாம் நேரடியாக கடவுளிடம் வேண்டியதைக் கேட்டுப் பெறமுடியும் என்பதை அறிந்திருக்காமல் இருக்கிறோம். 
2. இதுவரை, தமிழ்அறிஞர்கள் யாரும், நாம் நேரடியாக கடவுளிடம் வேண்டியதைக் கேட்டுப் பெறமுடியும் என்கிற தமிழ்முன்னோர் மூன்றாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில் நிறுவிச்சென்ற செய்தியை அறிவுறுத்தவோ, மீட்டெடுக்கவோ முனையவே இல்லை. 
3. கடவுளிடம் கேட்டால் கிடைக்கும் என்பதையும் இயற்கையின் இயக்கம் கொடுக்கல் வாங்கல்தான் என்பதையும் அனைத்து வழிகாட்டிகளும் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் மக்களை இப்படி வழிநடத்துகிறார்கள். அவர்கள் வழிகாட்டலில் அனைவரும் கடவுளிடம் இருந்து எப்படியோ பெற முடிகிறது என்பதுதான் உண்மை. அப்படிப் பெறுகிறவர்கள் வழிகாட்டிகளுக்கு கொடுக்கும் உண்டியல் காணிக்கையையும் பொன்னும் பொருளையும் கடவுளுக்கே கொடுப்பதாக நம்புகிறார்கள். வழிகாட்டிகள் பேரளவாக வளர்கிறார்களே என்கிற ஆதங்கத்தில் எழும் இப்படியான கேள்வியால் நேரடியான பயன் எதுவும் உறுதியாக இல்லை.

இயற்கையின் இயக்கம் கொடுக்கல் வாங்கல்தான். அதை தயைகூர்ந்து புரிந்து கொள்ளுங்கள் என்பதே உங்கள் கேள்விக்கு நான் தெரிவிக்கிற வேண்டுகோள் நிறைத்த விடை. 

இரண்டு அரை அணுக்கள் சேர்ந்து உருவான நம்மை- காலம் முழுவதும் நிலம், நீர், தீ, காற்று என்கிற இறை கொடுத்துக் கொடுத்து வளர்க்கிறது. இறுதியில் ஒரு நாள் நாம் இறந்து இறையில் கலந்து விடுவதில் நமக்குக் கொடுத்ததையெல்லாம் இறை நம்மிடம் இருந்து திரும்பப் பெற்று விடுகிறது.

கடவுள் நாம் கேட்கும் ஒவ்வொரு கேட்பிற்கும் அது தொடர்பான வேலையைக் கேட்டுப்பெறமால் நம்முடைய கேட்பை நிறைவேற்ற முடியாது.

கடவுளிடம், கொடுத்து வாங்க வேண்டும். இறையிடம், காலம் முழுவதும் வாங்கிக் கொண்டு கடைசியில் கொடுக்கலாம். இதுதான் இயற்கையின் இயல்பே. பேரளவாகக் கேளுங்கள். பேரளவாகக் கொடுங்கள் இரண்டிலும் பிழையேதும் இல்லை இரண்டும் இயற்கையின் இயல்பே.

நாம் வேலை கேட்டுச்செல்லும் நிறுவனங்கள், அந்த நிறுவனத்தில் நாம் வேலை செய்வதற்கு தகுதியான படிப்பை நம்மிடம் கேட்கிறது. வேலைக்குச் சேர்ந்ததும், நாம் செய்த வேலைகளுக்கு மாதா மாதம் சம்பளம் கேட்டுப் பெறுகிறோம் நாம்.

ஒரு திரைப்படக் கலைஞர் காசு வாங்கிக் கொண்டு நடிக்கிறார், இயக்குகிறார், பாடுகிறார். இசை அமைக்கிறார். காசு கொடுத்து கலையை வாங்கிய தயாரிப்பாளர், அதைப் படமாக்கி நம்மிடம் காசு வாங்கிக் கொண்டு படத்தைக் காட்டுகிறார். நாம் கலையை நுகர்ந்ததற்குக் காசு கொடுக்கிறோம்.

நாம் காலம் முழுவதும், பேரளவாக நாம் எடுப்பதற்கு இறை நமக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. எடுப்பதும் கொடுப்பதுமாக நாம் பெறுவது 
உடல் நலம்.
மன மகிழ்ச்சி
பொருளாதார முன்னேற்றம்
பயண உதவி வண்டிகளும் பாதுகாப்பான பயணமும்
பேரளவான தொடர்புகளின் ஒத்துழைப்பு ஆகியன.
நம் காலக்கெடு முடிகிற வரை இவைகளோடு அன்றாடம் சிறிதளவேனும் வளர்ந்து கொண்டே இருக்கிறோம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,742.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.