Show all

தமிழ்அடிப்படைவாதிகள் அதிகாரத்திற்கும், பொருளாதாரத்திற்கும் முனையவேண்டும்! தமிழ்அடிப்படையில் இயங்கும் மக்களை வளர்த்தெடுக்க

தமிழ்அடிப்படைவாதிகள் தங்கள் அதிகாரத்தையோ, பொருளாதார வளத்தையோ பெருக்கிக் கொள்வதற்கு முனையாமல் அவைகளின் மீதான தீண்டாமையைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருப்பதைக் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நான் கண்டு வருகிறேன்.

07,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: குறிப்பிட்ட அடிப்படையில் இயங்குகிற மக்களை பெருக்கிட- அந்தக் குறிப்பிட்ட அடிப்படைக்கான அடிப்படைவாதிகள் அதிகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். வெறுமனே தங்கள் அடிப்படையைக் கருத்துப்பரப்புதல் செய்வதால் தங்கள் அடிப்படையில் இயங்குகிற மக்களைப் பெருக்கிக் கொள்ள முடியாது.

இந்தப் பொது அடிப்படையை, பார்ப்பனிய அடிப்படைவாதிகள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். ஆனால் தமிழ் அடிப்படைவாதிகள் தொன்னூற்று ஒன்பது புள்ளி ஒன்பது ஒன்பது விழுக்காட்டினருக்கு மேலாகவே, இந்தப் பொது அடிப்படையின் அகர ஆகாரம் கூட அறியாதவர்களாகவே உள்ளனர்.

நான் தமிழ்அடிப்படைவாதியாக என்னை தமிழ்மண்ணில் களமிறக்கியதிலிருந்து, ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, உடன் தமிழ்அடிப்படைவாதிகள் வெறுமனே தமிழ்அடிப்படையைக் கருத்துப்பரப்புதல் செய்வதில் முனைவதைக் கண்டு வருகிறேன். 

அவர்களும் தங்கள் கருத்துப் பரப்புதலை படர்க்கை நிலையில் அள்ளித்தெளிக்க முயலாமல், ஒவ்வொரு தமிழனையும் முன்னிலையில் நிறுத்தி- நீ பேசுவது தமிழா? வெள்ளைக்காரன் தான் உனக்கு அப்பனா? என்று அவன் கழுத்தில் கத்தியைச் சொறுகுகிற போது, இவர்களே அவர்களுக்கு அன்னியமாகிப் போவதைப் பலமுறை நான் பார்த்து வந்திருக்கிறேன்.

மேலும் தமிழ்அடிப்படைவாதிகள் தங்கள் அதிகாரத்தையோ, பொருளாதார வளத்தையோ பெருக்கிக் கொள்வதற்கு முனையாமல் அவைகளின் மீதான தீண்டாமையைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருப்பதையும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நான் கண்டு வருகிறேன்.

பெரும்பாலான தமிழ்அடிப்படைவாதிகள் ஏதோவொரு அயல் அற்ப வாழ்மானத்தில் தங்களைப் பிழைப்பிற்கு ஈடுபடுத்திக் கொண்டு வெறுமனே கருத்துப் பரப்புதலில் முனைந்து வருவதை பலகாலமாக நான் பார்த்து வருகிறேன்.

பெரும்பாலான தமிழ்அடிப்படைவாதிகள் தங்கள் தமிழ்அடிப்படை பெறுவதற்கு காரணமான மிகச்சிலரின் கொண்டாடிகளாகவே இருந்து கொண்டிருப்பதிலும் அவர்களுடைய கருத்துக்களையே மறு பதிவு செய்து கொண்டிருப்பதையே தங்கள் வாழ்க்கை கடமையாக செயலாற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து வருகின்றேன்.

இதையெல்லாம் கண்டுபிடிப்பதற்கே என் வாழ்க்கையின் பெரும்பகுதி செலவாகிப் போனாலும், இந்தச்செலவில்- எனது பட்டறிவில் கிடைத்த, தமிழ் அடிப்படையில் இருந்து வளர வாய்ப்பான கணியம், மந்திரம் போன்ற தமிழ்முன்னோரின் அயலியல் கலப்பு இல்லாத. மிக எளிமையான தனிமனித முன்னேற்றத்திற்கான கலைகளைப் பயிற்றுவித்து, கொஞ்சம் கொஞ்சமாக பலரை தமிழ்அடிப்படையை நோக்கி ஈர்த்து வருகிறேன். 

பார்ப்பனியர் மிக இயல்பாகவே- பல ஆயிரம் ஆண்டுகளாக- தங்கள் அதிகாரம் செல்லுமிடங்களில், பொருளாதாரத்தை செலவழிக்காமல், பொருளாதாரத்தை ஈட்டுகிற வகையாகவே வாய்ப்புள்ள இடங்களில், பேரளவாக பார்ப்பனிய அடிப்படைக்கு மக்களை வழக்கப்படுத்தி வந்திருக்கின்றனர். 

அந்த வகையாகப் பார்ப்பனியர்களுக்கு நேற்று களமாடக் கிடைத்திருந்தது காங்கிரஸ், இன்று தங்களுக்கு பத்து விழுக்காடு இடஒதுக்கீடு எல்லாம் அமைத்துக் கொள்வதற்கு கிடைத்திருக்கிறது பார்ப்பனிய அடிப்படைக்கட்சி பாஜக, பார்ப்பனிய அடிப்படைக்கு ஒன்றிய ஆட்சி, பார்ப்பனிய அடிப்படை சார்ந்த பேரளவான உச்ச அறங்கூற்று மன்ற அறங்கூற்றுவர்கள். தமிழ்நாடு தவிர்த்து எல்லா மாநிலங்களிலும் பார்ப்பனிய அடிப்படையை மறுக்க முயலாத கட்சிகள் மற்றும் மக்கள்.

தமிழ்அடிப்படைவாதிகளுக்கு கிடைத்தது திராவிட இயக்கக் கட்சிகள் மற்றும் தமிழ்நாட்டு ஆட்சி என்றாலும் இதை முழுமையாகத் தக்க வைத்துக் கொள்வதற்கு தமிழ்அடிப்படைகளை எல்லா இடங்களிலும் நிறுவுவதற்கு சுணக்கம் காட்டி வருகிறது திராவிட இயக்க ஆட்சிகள். 

அரசுப்பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியைக் குறைத்து ஆங்கில வழிக்கல்வி பாடப்பிரிவை தொடங்குவதற்கு செயலலிதா அரசு வித்திட்டு இன்றைக்கு அது பார்ப்பனிய அடிப்படை அதிகாரிகளாலேயே முன்னெடுக்க முனைப்புக் காட்டப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் கல்வி வள்ளல்களாக உலாவரும் திராவிட இயக்க அரசியல்வாதிகள் தங்கள் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கும் ஒன்றிய பாடத்திட்டக் கல்விக்கும் மட்டுமே வாய்ப்பளித்து பார்ப்பனிய அடிப்படைக்கு மக்களை அணியப்படுத்தி வருகின்றனர்.

பல்வேறு தமிழ் அமைப்புகள், தமிழ் இயக்கங்களைக் கட்டமைத்து செயலாற்றி வருகிற- தமிழ் அடிப்படைவாதிகள் தனிதிறமையாளராக உயரவும் முனைவதில்லை. தமிழ் அடிப்படைவாதிகள் தொழில் அதிபர்களாக உயரவும் முனைவதில்லை. தமிழ் அடிப்படைவாதிகள் பெருவணிகர்களாக உயரவும் முனைவதில்லை. தமிழ் அடிப்படைவாதிகள் ஒன்றிய ஆட்சியைக் கைப்பற்ற உயரவும் முனைவது இல்லை. தமிழ் அடிப்படைவாதிகள் ஒன்றிய ஆட்சியைக் கைப்பற்றிய கட்சிகளில் தோளில் அமரும் வகைக்கு உயரவும் முனைவதில்லை. தமிழ் அடிப்படைவாதிகள் ஒன்றிய அதிகாரப் பணிகளில் பேரளாவக உயரவும் முனைவதில்லை. இவை அனைத்திலும் தமிழ்அடிப்படைவாதிகள் உயர முனைந்தால் மட்டுமே- உங்கள் வளர்ச்சியைத் தமிழ்அடிப்படையின் வளர்ச்சியாகக் கருதி உங்கள் தலைப்பை அங்கீகரிக்கும் வகைக்கு தமிழ்அடிப்படையை பின்பற்றுகிறவர்களைப் பேரளவாக வளர்த்தெடுக்க முடியும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,441.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.