Show all

வெளவால்களே காரணம், சீன ஆய்வகம் அல்ல என்கிறது உலக நலங்கு நிறுவனம்! கொரோனா இரவு ஓராண்டாக விடியாத நிலையில்

கொரோனா நுண்நச்சின் தொடக்கம் குறித்து, பல குற்றசாட்டுகள் எழ அதன் உண்மைத் தன்மையை அறிய சீனாவுக்கே சென்று பன்னாட்டு நிபுணர்குழு ஆய்வு நடத்தியது. அதில், வெளவாலிடமிருந்துதான் மனிதனுக்கு கொரோனா நுண்நச்சு பரவியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஓராண்டுக்கும் மேலாகக் கொரோனா கவ்விய இருட்டிலிருந்து இன்னும் உலகுக்கு விடியல் கிடைக்கவில்லை. அங்கே மருந்துகள், இங்கே தடுப்பூசிகள், இத்தனை பேர்கள் கொரோனா நுண்நச்சிலிருந்து விடுதலை என்று பேசப்பட்டாலும் எந்த நாட்டிலும், எங்கேயும் முழுமையாக கொரோனா நீங்கிவிட்டதாக மகிழ்ந்து கொண்டாட எந்த நிறைவான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வில்லை. 

இந்த நிலையில், கொரோனா நுண்நச்சு முதன்முதலில் எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு- கடந்த ஆண்டு சீனாவில் திடீரென கொரோனா பரவத் தொடங்கியபோது இந்த நுண்நச்சு வெளவால்களிலிருந்து மற்ற விலங்குகளுக்கும் அவை மூலமாக மனிதர்களுக்கும் பரவியிருக்கலாம் என்று கூறப்பட்டது. முதன்முதலில் சீனாவில்தான் கொரோனாவின் பாதிப்பு கண்டறியப்பட்டதால், இது சீன ஆய்வகத்திலிருந்துதான் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. சீனா பிற நாடுகளுக்கு எதிராக நடத்தும் உயிரி போர் இது என்று பலவாறான ஐயப்பாடுகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன.

ஆனால், சீனா இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஐ.நா-வின் நிபுணர் குழு சீனாவுக்கே சென்று ஆய்வுகளை நடத்தியது. அதன் முடிவில் கொரோனா வெளவால்களிடமிருந்தே பரவத் தொடங்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது. முதலில் வெளவால்களிடமிருந்து பிற விலங்குகளுக்குப் பரவி அதன்பின்பு மனிதர்களுக்குப் பரவியிருக்கிறது. இருப்பினும் தொடக்கம் வெளவாலிடமிருந்து என்று உறுதிப்படுத்தப்பட்டாலும், எப்படி எந்த விலங்கு மூலம் மனிதர்களுக்குப் பரவியது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என ஐ.நா குழு தெரிவித்திருக்கிறது.

இப்படியாக கடந்த ஒரு ஆண்டாக உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நுண்நச்சு செயற்கையான ஒன்றல்ல எனவும், அது சீனாவின் ஆய்வகத்திலிருந்து வெளியாகவில்லை எனவும் உறுதி செய்திருக்கிறது உலக நலங்கு நிறுவனத்தின்  ஆய்வறிக்கை. 

அண்மையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த அறிக்கை குறித்து பேசிய ஐ. நா தலைவர் அன்டோனியா குடரெஸ், இந்த ஆய்வின் முடிவை உறுதிசெய்ய இன்னும் முழுமையான கூடுதல் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியது கட்டாயம் எனத் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா பாதிப்புகள் ஓராண்டைக் கடந்திருக்கும் நிலையில் இன்னும் உலகின் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் இரண்டாம் அலைக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில்தான் கொரோனாவின் தொடக்கம் குறித்த ஐ.நா-வின் இந்த அறிக்கை பன்னாட்டு அளவில் பேசுபொருளாகியிருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.