ஐதராபாத் நிஜாம் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானுக்கு அனுப்பிய பணத்தை, ஐதராபாத் நிஜாம் வாரிசுகள் இந்தியாவுடன் இணைந்து மீட்க போராடி வருகிறார்கள். 11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய விடுதலைக்குப் பிறகு, தனி சிற்றரசாக இருந்த ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதை எதிர்கொள்ள பாகிஸ்தான் தரப்பில், நிஜாமுக்கு ஆயுதங்கள் அளிக்கப்பட்டன. அதற்கு ஐதராபாத் நிஜாம் 10 லட்சத்து 800 பவுண்டு பணம், இங்கிலாந்தில் இருந்த பாகிஸ்தான் தூதர் ஹபிப் இப்ராகிம் ரஹிம்தூலாவுக்கு அனுப்பிவைத்தார். அப்பணம், பாகிஸ்தான் தூதர் பெயரில் லண்டனில் உள்ள நேட்வெஸ்ட் வங்கி கணக்கில் போடப்பட்டது. பின்னாளில், ஐதராபாத் நிஜாமின் சிற்றரசு, இந்தியாவில் இணைக்கப் பட்டுவிட்ட நிலையில், அப்பணத்தை நிஜாம் திரும்பக்கோரினார். பாகிஸ்தான் மறுக்கவே, யார் உரிமையாளர்? என்று தெளிவான பிறகு பணத்தை ஒப்படைப்பதாக வங்கி நிர்வாகம் தெரிவித்தது. இதுதொடர்பாக லண்டன் அறங்கூற்றுமன்றத்தில், ஐதராபாத் நிஜாம் சிற்றரசு இந்தியாவில் இணைக்கப் பட்டு விட்டதால் அந்தப் பணமும் இந்தியாவிற்கு சொந்தமாகிறது என்று இந்தியாவும் வழக்கில் இணைந்திருக்கிறது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே பல ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வருகிறது. நிஜாமின் வாரிசுகள், இந்திய அரசுடன் கைகோர்த்து வழக்கை நடத்தி வருகிறார்கள். தற்போது இறுதிக்கட்ட விசாரணை முடிந்த நிலையில்,இன்னும் 6 கிழமைகளில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லண்டன் வங்கியில் உள்ள பணம், தற்போது ரூ.315 கோடியாகப் பெருகி உள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,195.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.