Show all

என்ன இந்தப் பட்டியல்! அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, இத்தாலி, இந்தோனேசீயா, இராக், இறியுனியன், பாகிஸ்தான்…

அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, இத்தாலி, இந்தோனேசீயா, இராக், இறியுனியன், பாகிஸ்தான்… எனத் தொடருகிறது நூறு நாடுகளின் பட்டியல். என்ன இந்தப் பட்டியல்?

01,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, இத்தாலி, இந்தோனேசீயா, இராக், இறியுனியன், எமிரேட்ஸ், ஓமான், கயானா, கரீபிய நாடு, காடார், குவைத், சவூதி அரேபியா, சிங்கப்பூர், சீசெல்சு, சுரிநாம், சுவீடன், டென்மார்க், தாய்லாந்து, தென் ஆப்ரிக்கா, நார்வே, நியூசிலாந்து, பரெயின், பிரான்சு, பிலிப்பைன்ஸ், பீஜி, போர்த்துக்கல், மலேஷீயா, மியன்மார், மொரிஷீயஸ், ஜிபுட்டி, ஜெர்மனி, ஜோர்டான், ஸ்பெயின், ஹாங்காங் இது என்ன பட்டியல் தெரியுமா? 

இவை போன்ற நூறு நாடுகளில் தமிழர்கள் அந்த நாடுகளின் குடிமக்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். இதுபோலவே, இந்திய விடுதலையின் போது இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் தற்போதைய இந்தியாவின் தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாண தலைநகர் கராச்சி உள்ளிட்ட நகரங்களில் குடியேறியதாக ஆய்விதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

தற்போதும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பாகிஸ்தானில் வசித்து வசிக்கின்றனர். பாகிஸ்தானில் தமிழர்கள் அதிகம் வாழும் சென்னை பேட்டை என்றே ஒரு பகுதி இருக்கிறது. பாகிஸ்தானில் டிரி ரோட் மற்றும் கோராங்கி ஆகிய பகுதிகளிலும் தமிழ் மக்கள் வசித்து வருகின்றனர். சிலர் கராச்சியை ஒட்டியுள்ள நகரங்களுக்கும் வாய்ப்புகளை தேடி நகர்ந்துள்ளனர்.

தமிழர்கள் கராச்சி நகரத்தை சென்றடைந்த காலம்தொட்டு இன்றுவரை தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலானோர் அங்குள்ள ஜின்னா அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் நலங்குப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். ஆனால், கல்வியில் சிறந்து விளங்கிய தமிழர்கள் பலர் அங்குள்ள தொழிற்சாலைகளில் பொறியியலாளர்களாகவும், அரசுப்பணியிலும் இருக்கின்றனர்.

கராச்சி நகரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சென்னைப் பேட்டையில் ஒரு மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கராச்சியில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் இன்னமும் தமிழ்க் கலாசரத்தையே பின்பற்றுகிறார்கள். அந்த வகையில், இங்குள்ள மாரியம்மன் கோயில்தான் கராச்சிவாழ் தமிழர்களை ஒன்றிணைக்கும் மையமாக விளங்குகிறது. அதாவது, பொங்கல் விழாக் கொண்டாட்டம், ஆடி மாதக் கொண்டாட்டம், உள்ளிட்டவை ஒவ்வொரு ஆண்டும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழகம், மலேசியா உள்ளிட்ட நாடுகளை போன்று முருகருக்கு காவடி எடுத்து அலகு குத்தும் பழக்கமும் இங்கு இன்னமும் கடைபிடிக்கப்படுகிறது. அதேபோன்று, இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், அவ்வப்போது தன்னார்வலர்களால் இளம் தலைமுறையினருக்கு தமிழ் மொழியும் இங்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த பெரும்பாலான தமிழர்கள் காலங்காலமாக தங்களுக்குள் தமிழ் மொழியிலும், மற்ற இடங்களில் உருது மொழியிலும் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்களும், அவர்களது அடுத்த சில தலைமுறையினரும் தமிழில் சரளமாக உரையாடுவதோடு, எழுத, படிக்கவும் தெரிந்த நிலையில், அண்மை ஆண்டுகளாக அந்த நிலைமை மோசமாகி வருவதாக தமிழ் முதியவர்களிடம் ஒரு கவலை காணப்படுகிறது.

கராச்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும், அன்று முதல் இன்றுவரை இங்குள்ள பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக கற்பிக்கப்படவில்லை. எனவே, தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த புதிதில் தமிழை நன்கறிந்திருந்த பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு பேச, எழுத, படிக்க சொல்லி கொடுத்து வந்தனர். காலப்போக்கில் அடுத்தடுத்த தலைமுறைகளை சேர்ந்த பெற்றோருக்கே தமிழ் மொழி சரளமாக பேச முடியாத நிலை உருவானதால் அவர்களது குழந்தைகளுக்கு தாய்மொழியை அறிந்துகொள்ளும் வாய்ப்பே குன்றிவிட்டது. 

இருப்பினும், இந்த சூழ்நிலையை கண்டு வேதனையடைந்த தன்னார்வலர்கள் சிலர் பல ஆண்டுகளாக இங்குள்ள மாரியம்மன் கோயிலில் தமிழ் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுபோன்ற முறைசாரா வகுப்புகளில் அனைவரும் பங்கேற்பார்கள் என்று கூற முடியாதே என்கிற கவலை தன்னார்வலர்களிடம் உள்ளது.

தமிழர்கள் பாகிஸ்தானுக்கு வந்தபோது உடலுழைப்பு சார்ந்த வேலைகளை பார்த்தார்கள். ஆனால், இப்போது நல்ல கல்வியறிவை பெறுவதற்கான சமூக அழுத்தம் அதிகரித்துள்ளது. அப்படி பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் தமிழ் குழந்தைகளுக்கு தங்களது தாய்மொழியை படிப்பதற்காக வாய்ப்பே இல்லாதது பெரும் கவலையாக உள்ளது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் கராச்சியில் தமிழ் மொழியின் நிலை எவ்வாறாக இருக்கும் என்பது பெரும் கேள்விக்குறியே என்று தமிழர்கள் வருந்துகின்றார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கராச்சியில் தமிழ் மொழியை காப்பாற்றுவதற்கு பன்னாட்டு அரசுகள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியும், வழிகாட்டுதலும் தேவைப்படுவதாக அவர்கள் கோருகின்றனர்.

தமிழகத்துக்கு ஒருமுறை கூட வந்ததே இல்லாத பாகிஸ்தான் தமிழர்கள் பலரும் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள ஆர்வமுடனே இருக்கிறார்கள். ஆனால், தமிழ் மொழியை கற்றுக்கொள்ள தேவையான பள்ளி போன்ற கட்டமைப்போ, புத்தகங்களோ இல்லாத நிலை அவர்களுக்கு சுணக்கத்தை ஏற்படுகிறது. எனவே, தமிழக அரசோ அல்லது தன்னார்வலர்களோ எங்களுக்கு தமிழ் மொழியை வளர்க்க உதவினால்தான் பாகிஸ்தானில் தமிழை நிலைக்க செய்ய முடியும். என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தானில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவதற்கு நுழைவு அனுமதி (விசா) பெறுவதில் கெடுபிடிகள் நிறைய உள்ளதாகவும், அவை சீராக்கப்பட்டால் அதிக அளவிலான பாகிஸ்தானிய தமிழர்கள் தங்களது தொன்மை மண்ணைப் பார்வையிட வருவார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்த தலைமுறையினரில் பெரும்பாலானோர் தற்போது உயிருடன் இல்லை. இருப்பினும், பாகிஸ்தானிலேயே பிறந்து, வளர்ந்த பலரும் தமிழகத்துக்கு வந்து செல்ல விரும்புகிறார்கள். அவ்வப்போது சிலர் சென்று வருவதுண்டு. ஆனால், பாகிஸ்தான் தமிழர்கள் யாருக்கும் மீண்டும் நிரந்தரமாக தமிழகத்துக்கு திரும்பும் எண்ணம் இல்லை. 

ஏனெனில், பல தலைமுறைகளாக பாகிஸ்தான்வாழ் தமிழர்களுக்குள்ளேயே திருமண உறவு நீடித்ததால் இங்குள்ள ஏராளமானோருக்கு தமிழகத்தில் நேரடி உறவுமுறைகளே இல்லை என்றே சொல்லலாம். மேலும், அண்மை ஆண்டுகளாக கராச்சியில் வாழும் தமிழர்கள் வேற்று மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்களை திருமணம் செய்துகொள்வது அதிகரித்து வருவதால், அவர்களது அடுத்த சந்ததியினருக்கும் தமிழ் மொழி கடத்தப்படுமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கராச்சியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் வசித்து வந்த தமிழர்கள் தற்போது பணிவாய்ப்பு, திருமணம், கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகவும் பாகிஸ்தானின் மற்ற பகுதிகளில் குடியேறுவது அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாகிஸ்தானில் உள்ள தமிழர்கள் அனைவரும் எளிதில் தமிழ் மொழி கற்கும் நிலை உருவாக வேண்டும். பாகிஸ்தானில் தமிழ் மொழியும் அதன் கலாசாரமும் காலத்துக்கும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதே தமிழ் மொழியின் மீது ஆர்வம் கொண்ட கராச்சிவாழ் பாகிஸ்தான் தமிழர்களின் கருத்தாக உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.