Show all

இராகுல்காந்தி குற்றச்சாட்டு! முகநூல், புலனத்தை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்துகிறது. பரபரப்பு காட்டாத காங்கிரஸ்

பாஜக ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக கருதுகிறதா காங்கிரஸ்? அதை ஏன் இராகுல் காந்திக்கு புரியவைக்க முயலவில்லை? அவர் பாட்டுக்கு வெட்டியாக நடுவண் பாஜக அரசு மீது, தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளைத் தனி முழக்கமாக முன்னெடுக்கிறார்.

01,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள், ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை மற்றும் லடாக் எல்லையில் சீனாவுடனான மோதல் ஆகியவற்றில் நடுவண் பாஜக அரசின் குற்றங்குறைகளைப் பட்டியல் இட்டு, இராகுல் காந்தி ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் தனது பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இந்தியாவில் முகநூல் மற்றும் புலனம் ஆகியவற்றை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டை தற்போது அவர் முன் வைத்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள கீச்சு செய்தியில், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் போலியான செய்தியை பரப்பி, அதன் வழியே வெறுப்புணர்வு அரசியலை முன்னெடுக்கிறார்கள். தேர்தலில் அதனைப் பயன்படுத்தி செல்வாக்கை பெற முயற்சிக்கின்றனர். என்பதாகவும், அமெரிக்க ஊடகமும் முகநூலின் இந்தவாறான உண்மை பற்றி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது என தெரிவித்து உள்ளார்.

சமூக ஊடகங்களில் வெளியிடும் செய்திகளை திரித்து கூறும் வேலைகளில் பாஜக ஈடுபடுகிறது என்ற இராகுல் காந்தி தனது  குற்றச்சாட்டுக்குச் சான்றாக, அமெரிக்காவில் இருந்து வெளிவரும் தி வால் ஸ்டிரீட் ஜர்னல் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியை கவனியுங்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அந்த செய்தியில், வெறுப்பு பேச்சுகளுக்கான முகநூலின் விதிகள் இந்திய அரசியலில் வேறுபடுகிறது என்ற வகையில் தகவல்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.  ஆளும் பாஜகவின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் வெறுப்பு பேச்சுகள் மற்றும் ஆட்சேபனைக்குரிய பதிவுகளை நீக்குவதில் முகநூல் பாரபட்சம் காட்டுகிறது.

முகநூல் நிறுவனத்தின் செயல் அதிகாரி ஒருவர், சர்ச்சைக்குரிய அரசியல்வாதிக்கு தடை விதிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். பாஜக தொண்டர்களின் அத்துமீறல்களை தண்டிப்பது, இந்தியாவில் முகநூல் நிறுவனத்தின் வர்த்தக நலனில் பாதிப்பு ஏற்படுத்தும் என கூறியுள்ளார் என்று அமெரிக்க ஊடகத் தகவல் தெரிவிக்கின்றது.

இதேபோன்று, அந்நிறுவனத்தின் நடப்பு மற்றும் முன்னாள் பணியாளர்களைக் குறிப்பிட்டு, பாஜகவுக்கு ஆதரவான முறையிலான அம்சங்களை முகநூல் நிறுவனம் கொண்டுள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

இராகுல் காந்தி தொடர்ந்து தனித்தே நடுவண் பாஜக அரசின் மீது குற்றச்சாட்டு வைத்து வருகிறார். காங்கிரஸ் கட்சிக்காரர்கள் யாரும் இராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு வலுவூட்டுதாக தங்கள் தரப்பு ஆதாரங்களை சூட்டிக்காட்டுவதோ, தேடுவதோ கூட இல்லை. ஊடகங்களும் காங்கிரசின் பேரறிமுகம் இராகுல் என்பதற்காக செய்தி வெளியிடுகின்றன. இராகுலின் குற்றச்சாட்டுகள் எதுவும் நடுவண் பாஜக அரசுக்கு எதிராக மக்கள் நடுவே சிறு சலசலப்பைக் கூட ஏற்படுத்துவதில்லை. 

பாஜகவிற்கு எதிராக செய்தி வெளியிடுவது பெரிய ஊடகம் செய்தி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற நிலையில், இராகுலின் செய்திக்கு கூடுதல் பார்வை கூட மக்களிடம் இருந்து ஊடகங்களுக்கு கிடைக்காத நிலையில் அவர்கள் எப்படி இராகுல் செய்திகளுக்கு சிறப்பாக ஒளியைப் பாய்ச்ச முடியும். 

பாஜக எதிர்கட்சிகள் மீது வெறுப்பு அரசியலை பதிவிடுவது ஒருபக்கம் இருக்கட்டும். காங்கிரஸ் உட்கட்சிக்குள்ளாகவே வெறுப்பு அரசியலை புறக்கணிப்புகளாக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறதே அதை எப்பபோது இராகுல் புரிந்து கொள்ளப் போகிறார். புரிந்தும் புரியாதது போல இருக்கிறார் என்றால் அவர் பாஜகவிற்கு எதிராக வெட்டியான பதிவுகளை இட்டுக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் என்ன? 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.