கொரோனா பரபரப்புகளுக்கு இடையே இலங்கையில் நாளை பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த முறை 16 இடங்களில் வெற்றி பெற்றிருந்த தமிழ் தேசிய கூட்டணி தற்போது 29 இடங்களில் போட்டியிடுகிறது. 20,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பரபரப்புகளுக்கு இடையே இலங்கையில் நாளை பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கை அதிபராக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்ச, நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். பதவிக்காலத்தில் 6 மாதங்கள் எஞ்சியிருந்த நிலையில் 8வது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை இலங்கைக்கு பாராளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. பரப்புரைக் கூட்டங்களில் 100 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது, முகமூடி, தனிமனித இடைவெளி ஆகியவை கட்டாயம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. வெளிநாட்டு பார்வையாளர்கள் அழைக்கப்படாமல் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதும் முதன்மைத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வாக்குச்சாவடிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை பின்பற்றி வாக்காளர்கள் கொரோனா அச்சமின்றி வாக்களிக்கலாம் என்றும் இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கை தலைமைஅமைச்சர் யார் என்பதை தேர்வு செய்வதற்கான இந்தத் தேர்தலில்- கடந்தமுறை நடைபெற்ற தேர்தலில் 16 இடங்களில் வெற்றி பெற்ற தமிழ் தேசிய கூட்டணி தற்போது 29 இடங்களில் போட்டியிடுகிறது. ராஜபக்ச சகோதரர்களின் பொதுஜன பெரமுன கட்சியும், ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் தேசிய கட்சியும், மைத்ரிபாலாவின் சுதந்திர கட்சியும் களத்தில் உள்ளன. மும்முனைப்போட்டி நிலவும் தேர்தல் களத்தில் அறுதிப்பெரும்பான்மையை பெற்று விட ராஜபக்ச சகோதரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மொத்தம் 225 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 29 இடங்கள் கட்சிகளின் பலத்துக்கேற்ப ஒதுக்கப்படும். எஞ்சியுள்ள 196 இடங்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவே தேர்தல் நடத்தப்படுகிறது. 7,452 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். ஒரு கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள நிலையில், 12,984 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாளே எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இலங்கையில் முன்னெடுக்கப்படுவது விழுக்காட்டு அடிப்படை தேர்தல் முறை என்பதால்- 29 இடங்களில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டணி அதிக வாக்குகளைப் பொற்றால் அதிக உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு பெறமுடியும். தமிழ் தேசிய கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைக்க நமது வாழ்த்;துக்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.