Show all

உயிர்த்தெழுமா டிக் டாக் இந்தியாவிலும்! டிக் டாக்கிற்கு உயிர் கொடுக்கும் விளையாட்டில் தொட்டு விட்டு ஓடிக் கொண்டிருக்கிறது மைக்ரோசாப்ட்

டிக் டாக் செயலியை அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம். சில பகுதிகளுக்கான உரிமையை வாங்கி விடும் நிலையில், இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு மீண்டும் உயிர் கொடுக்க வாய்ப்பு இருப்பதாகப் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது.

19,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில், கடந்த தலைமுறையில், உயிர் கொடுத்து ஓட்டத்தில் கலக்கவிடும் விளையாட்டு என்ற ஒரு விளையாட்டு சிறுவர்களால் விளையாடப்படுவதுண்டு. இந்த விளையாட்டை குறைந்த பட்சம் மூவரிலிருந்து எத்தனை பேர்கள் வேண்டுமானலும் விளையாடலாம். 

விளையாட்டில் உள்ள அனைவரும் வட்டமாக கைகோர்த்து நின்று கொள்வார்கள். அதிலிருந்து ஒருவர் ஒன்று, இரண்டு, மூன்று சொன்னவுடன் அனைவரும் கைகளை விடுவித்துக் கொண்டு, ஒவ்வொருவரும் இடது உள்ளங்கையின் மீது வலது உள்ளங்கை கவிழ்த்தியோ நிமிர்த்தியோ வைத்து பொதுவில் காட்ட வேண்டும். கவிழ்;த்திய கை, நிமித்திய கை இவற்றுள் எது குறைவாக இருக்கிறதோ அவர்கள் எல்லாம் கனிந்தவர்கள். 

மீதி உள்ளவர்கள் அந்த கனிந்தவர் கண்டறிதல் சோதனையில் மீண்டும் ஈடுபடுவார்கள். கடைசியாக கனியாத மூவர் இருக்கும் போது கனிந்தவர் சோதனையில் ஒருவர் தேர்ந்து மீதம் இருவர் இருப்பார்கள் அல்லவா? அப்போது கடைசியாக கனிந்த ஒரு சிறுவர் ஒப்புக்கு சோதனையில் கலந்து கொள்வார். மீதம் உள்ள இருவரில் ஒருவர் கனிந்த பிறகு சோதனை முடிந்து விடும். 

அந்த மீதமுள்ள சிறுவன் இப்போது காய். மற்றவர்கள் எல்லாம் ஓட வேண்டும். இந்த காய் சிறுவன் அவர்களில் ஒருவரை ஓடிப்பிடித்தால் இனி அவர்தான் காய். அவர் மற்றவர்களை ஓடிப்பிடிக்க வேண்டும். களைப்பு ஏற்படும் வரை அல்லது பலர் வீடுகளில் பெற்றோர் சாப்பிட அழைக்கும் போது விளையாட்டு கலைந்து விடும். 

மாலை முழுவதும் விளையாட்டு என்கிற அந்த மாலை நேரத்தில்தாம் தமிழகத்தின் பல கிராமப் பகுதிகளில் இந்த விளையாட்டு விளையாடப்படும்.

இந்த விளையாட்டில் ஓடும் சிறுவர்கள் களைப்பு ஏற்பட்டால் அமர்ந்து விடுவார்கள். பெரும்பாலும் காய் சிறுவர் பிடிக்க அருகில் வந்து விட்ட போது, அவர்களிடம் சிக்காமல் இருக்க அமர்ந்து விடுவார்கள். அப்படி அமர்ந்த சிறுவர்கள் அவர்களாக எழுந்து ஓட முடியாது. எல்லோருமே அமர்ந்து விட்டால் கடைசியாக அமர்ந்தவர் காய். 

இந்த அமர்ந்த சிறுவரை எழுப்ப, ஓடிக் கொண்டிருக்கும் யார்வேண்டுமானாலும் தொட்டு உயிர் கொடுக்கலாம். அப்படி உயிர் பெற்றுவிட்டால் அவர் களத்தில் இறங்கி ஓடலாம். 

இது போன்றதொரு வணிக விளையாட்டில்தான் சீனச்செயிலி என்பதற்காக இந்தியாவால் டிக்டாக் செயலி அமர்த்துவிக்கப்பட்டு விட்டது. வணிக விளையாட்டில் எழந்து ஓட ஆசைப்பட்டு யாராவது உயிர் கொடுக்க மாட்டார்களா என்று டிக்டாக் நிறுவனம் ஏங்கியிருக்கும் நிலையில், தொட்டு உயிர் கொடுக்க அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்வந்திருப்பதாகத் தெரிகிறது.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான பஞ்சாயத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வணிகத்தில் தொடங்கி, ஹாங்காங் பஞ்சாயத்து, கொரோனா நுண்நச்சு பஞ்சாயத்து, சுழியம் பாதுகாப்பு பஞ்சாயத்து என தொடர்ந்து கொண்டே போகிறது. இந்த சிக்கல்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக, டிக்டாக் செயிலியை இந்தியாவைப் போல, அமெரிக்காவிலும் தடை செய்ய இருப்பதாகச் சொன்னது அமெரிக்க அரசு. 

மறு பக்கம் மைக்ரோசாப்ட் நிறுவனம், டிக் டாக்கை வாங்க இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. சுpக்கல் உச்சகட்டத்தில் இருந்த போது தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லா உடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்தித்துப் பேசியதாகச் செய்திகள் வெளியானது.   

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சந்திப்புக்குப் பின், மீண்டும் குறுங்காணொளிச் செயலியான டிக் டாக்கை வாங்குவது டொடர்பாக, பைட் டான்ஸ் நிறுவனத்தினுடனான கலந்துரையாடல் தொடர்ந்து நடக்கும் எனச் சொல்லி இருந்தது மைக்ரோசாப்ட் நிறுவனம். 

அடுத்த மாதத்திற்குள் இந்த ஒப்பந்தம் ஒரு முடிவுக்கு வரலாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் அறிக்கையில் சொல்லி இருக்கிறது. அதே நேரத்தில் இந்த கலந்துரையாடல் ஒரு சுமூகமான ஒப்பந்தத்திற்கு உறுதியாக வராமலும் போகலாம் என்றும் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். 

இத்தனை நாளாக டிக் டாக் செயலியை தடை செய்துவிடுவேன் எனச் சொல்லிக் கொண்டு இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், எப்படி மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக் டாக்கை வாங்க சுமார் 45 நாள் அவகாசம் கொடுத்து இருக்கிறார் என்றே புரியவில்லை. அவர் மன மாற்றத்துக்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.   

சீனாவின் பைட் டான்ஸ் மற்றும் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு இடையே நடக்க இருக்கும் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்க அரசின் அமெரிக்காவில் அன்னிய முதலீடு தொடர்பான குழு  மேற்பார்வை இடுமாம். இந்த அமைப்புக்கு இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரமும் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. 

மைக்ரோசாப்ட் நிறுவனம், ஒட்டுமொத்தமாக டிக் டாக் செயலியை விலைக்கு வாங்கப் போவதில்லையாம். டிக் டாக் நிறுவனத்தின் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூ சிலாந்து போன்ற கிளைச் செயல்பாடுகளை மட்டுமே வாங்கப் போகிறார்களாம். இந்த ஒப்பந்தம் நடந்தால், அமெரிக்க டிக் டாக் பயனர்களின் தரவுகள், அமெரிக்காவிலேயே இருப்பதை மைக்ரோசாப்ட் உறுதி செய்யுமாம். 

உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் பில் கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனம், தனியே பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக் டாக் செயலியை வாங்காமல், மற்ற அமெரிக்க முதலீட்டாளர்களையும், ஒரு சிறிய பகுதி டிக் டாக் செயலி பங்குளை வாங்க அழைப்பு விடுக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. 

டிக் டாக் செயலியை அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கி விடும் நிலையில், இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு மீண்டும் உயிர் கொடுக்க வாய்ப்பு இருப்பதாகப் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.