Show all

ரூபாய் 2,15,000 அபராதம் மற்றும் சிறை தண்டனை! மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பிய சிவகங்கை நபருக்கு

ரூ.2.15 லட்சம் அபராதம் மற்றும் சிறை தண்டனை. மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா பரப்பிய சிவகங்கை நபருக்கு. காரணம்: மலேசியா திரும்பிய பின்னர் 14 நாட்கள் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்ததை மீறியுள்ளார்.

30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தின் சிவகங்கை பகுதியில் இருந்து கடந்த மாதம் வந்தடைந்த, இந்தியக் குடிமகனான நேசர் முகமட் சாபுர் பாட்சா மூலம் மலேசியாவில் 45 பேருக்கு கொரோனா நுண்நச்சுத் தொற்று பரவியுள்ளது. இதையடுத்து அவருக்கு மலேசிய அறங்கூற்றுமன்றம் ஐந்து மாத சிறை தண்டனையும் 12 ஆயிரம் மலேசிய ரிங்கிட் அபராதமும் விதித்துள்ளது.

மலேசியா திரும்பிய பின்னர் 14 நாட்கள் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அவர் அந்த உத்தரவை மீறியுள்ளார். இதன் காரணமாக அவரிடம் இருந்து பலருக்கும் கொரோனா நுண்நச்சு தொற்று பரவியது உறுதியாகியுள்ளது.

இந்தியக் குடிமகனான நேசர் முகமட் சாபுர் பாட்சா என்ற 57 அகவை நபர், மலேசியாவில் உள்ள கெடா மாநிலத்தில் சொந்தமாக உணவகம் நடத்தி வருகிறார். இவரது செயல்பாடு காரணமாக மலேசியாவின் 3 மாநிலங்களுக்கு கொரோனா நுண்நச்சுத் தொற்று பரவியுள்ளது. நான்கு பகுதிகளில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சிவகங்கை நபர், கொரோனா நுண்நச்சின் திரிபு எனக்கருதப்படும் அதிக வீரியமுள்ள, வேகமாகப் பரவும் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மலேசிய நலங்கு அமைச்சகம் கருதுகிறது. இது கவலையை ஏற்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார், மலேசிய நலங்கு அமைச்சக பொது ஆணையர் நூர் ஹிஷாம்.

நாட்டில் கண்டறியப்பட்ட இதர கொரோனா தொற்றுக் குழுக்களை விட ‘சிவகங்கா’ தொற்றுக்குழு மூலம்தாம் குறுகிய காலத்தில் அதிகமானோருக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது. இது மலேசியாவில் இதுவரை காணப்படாத வேகம். எனவே, இது அதிதபரவு வகை பாதிப்பாக இருக்கக்கூடும்.

‘இந்த வகைத் தொற்று மிக வேகமாகப் பரவக்கூடிய தன்மையைக் கொண்டது. எகிப்திலும் பாகிஸ்தானிலும் இந்த வகைத் தொற்றுப் பரவல் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்தப்படும்,’ என்று நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேசர் முகமட் சாபுர் பாட்சா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. அதன் மீதான விசாரணையின் முடிவில் தற்போது சிகிச்சை பெற்று வரும் அவருக்கு சிறைத்தண்டனையும் ரூ.2.15 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.