Show all

வலதுசாரி, இடதுசாரி ஓர் அலசல்!

உலகினரால் இதுவரை இந்தியா இடதுசாரி ஆதரவு நிலைப்பாடு கொண்ட நாடாகவே பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தியாவில் வலதுசாரி சிந்தனையை முன்வைத்து, பாஜக இரண்டாவது முறையும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில்- உலகின், இந்தியா குறித்த பார்வை மாறி வருகிறது என்ற நிலையை உணரமுடிகின்றது. வலதுசாரி என்றால் என்ன? இடதுசாரி என்றால் என்ன? என்று அலசுகிறது இந்தக் கட்டுரை. 

10,தை,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்;க ஒன்றிய அரசில் புதியதாகப் பதவியேற்றுள்ள ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் முதன்மைப் பதவிகளில் பணிபுரிய இந்திய மரபுவளியைச் சேர்ந்த சுமார் 20 பேரை பரிந்துரைத்திருந்தார். அமெரிக்க மக்கள்தொகையில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவுள்ள இந்தியர்களுக்கு இது மிகப் பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது

இருப்பினும், முன்பு பரிந்துரைத்திருந்த பட்டியலுடன் பார்க்கும்போது சோனல் ஷா மற்றும் அமித் ஜானி ஆகியோரது பெயர்கள் இதில் விடுபட்டுள்ளன. பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடனான தொடர்பு காரணமாக இவர்களை பைடன் நிர்வாகம் விலக்கி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவே வலதுசாரி ஆதரவு நிலைப்பாட்டு நாடாக உலகம் பார்த்து வருகிற நிலையில், அமெரிக்காவே தற்போது இந்தியாவின் ஆட்சியில் உள்ள பாஜகவினரின் வலதுசாரிபோக்கை புறந்தள்ளுவதை இந்திய அரசியல் பார்வையாளர்கள் அதிர்ச்சியோடு கவனிக்கின்றார்கள். இந்த நிலையில் அது என்ன இடதுசாரிகள் வலதுசாரிகள் என்று இந்தக் கட்டுரையில் நாம் அறிய முயல்கிறோம்.
 
வலது சாரி, வலதுசாரிகள் என்று அரசியலில் கூறப்படும் அமைப்பினர், அரசியலில் பழமைப் போக்கை அதாவது மரபு சார்ந்த அதிகாரத்தை ஆதரிப்பவர்களையும், சமய கோட்பாட்டினை அதன் குருமார்கள் வழிநின்று ஆதரிக்கும் அரசியல்வாதிகளையும் ஏளனத்துடன் குறிக்கப் பயன்படும் சொல்லாகும். முதலாளித்துவக் கொள்கைகளை ஆதரித்தல் அல்லது அவ்வாறு ஆதரிப்பவரைப் பொதுவாக வலதுசாரிகள் என்பர். மேற்கு நாடுகளில் வலதுசாரி அரசியல் என்பது தீவிர வலது சாரிக் கொள்கைகளான இனவாதம், குடிவரவாளர் எதிர்ப்பு, சர்வதிகாரம், பழமைவாதம் போன்ற கொள்கைகளை உள்ளடக்கிய அரசியல் ஆகும். இது பாசிசம், நாசிசம், வெள்ளையின ஆதிக்கம் ஆகியவற்றுடன் பொதுவாகத் தொடர்புபடுத்தப்படுவது. வலதுசாரி என்றால் அவர் பணக்கார்களின் ஆதாரவாளர், ஏழைகளின் எதிரி, தொழிலாளர்களைச் சுரண்டுபவர், ஏகாதிபத்திய ஆதரவாளர், பாசிசவாதி, மதவாதி, கொடூர நெஞ்சம் படைத்தவர் என்றும், இடதுசாரி என்றால் அவர் ஒரு ஏழைப் பங்காளன், ஏற்ற தாழ்வுகளை அகற்றப் பாடுபடுபவர், ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர், மதவாதத்தை எதிர்ப்பவர் என்றும் முத்திரை குத்தப்படுகிறது. 

இந்த வலது சாரி, வலது சார்புடையவர் என்ற சொல் பிரஞ்சு புரட்சியின் பொழுது அறிமுகப்படுத்தப்பட்டதாகும். அன்றைய காலக்கட்டத்தில் நாடாளுமன்றத்தில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் அரசரின் முடியாட்சியை ஆதரித்தவர்களுக்கும், பிரபுக்கள் மற்றும் மத குருமார்கள் அமர்ந்திருந்த இருக்கைகளின் வலதுபுரம் அமர்ந்திருந்தவர்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட சொல்லாடலாகும்.

இடதுசாரி - இடதுசாரி அரசியல் என்பது கருத்தியல் நோக்கில் சமூக சமத்துவத்தை ஆதரிக்கின்ற அல்லது அதை ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு அரசியல் நோக்கு அல்லது நிலைப்பாடு ஆகும். பொதுவாக இது சமூக ஏற்றத்தாழ்வுக்கும், சமூக சமத்துவமின்மைக்கும் எதிரானது. இது சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நலன்கள் கவனிக்கப்பட வேண்டுமென்றும், சமூகத்தில் காணப்படும் நியாயமல்லாத சமத்துவமின்மைகள் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் அல்லது குறைக்கப்பட வேண்டுமென்றும் கருதுகிறது. 

அரசியலில், இடது, வலது என்னும் பயன்பாடுகள் பிரெஞ்சுப் புரட்சியின்போது (1789-1799) உருவாயின. அக்காலத்திய பிரெஞ்சு அரசியல் அவையில், முடியாட்சியை ஆதரித்தவர்கள் வலது பக்க இருக்கைகளிலும், அதை எதிர்த்துப் புரட்சியை ஆதரித்ததுடன், குடியரசு உருவாக்கப்படுவதை ஆதரித்தவர்கள் இடது பக்க இருக்கைகளிலும் அமர்ந்து இருந்தனர். அரசியலில் இடது, வலது என்ற பயன்பாடுகள் உருவானதற்கான மூலம் இதுவே. 

எனினும், 1815ல் முடியாட்சி மீண்டும் மீள்விக்கப்பட்ட பின்னரே அரசியலில் ‘இடது’ என்னும் சொல் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் இச்சொல் பல்வேறு இயக்கங்களைக் குறிப்பதற்குப் பயன்பட்டது. சிறப்பாகப் பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் குடியரசியம், சமூகவுடமை, பொதுவுடமை, அரசின்மை போன்றவை இச்சொல்லால் குறிக்கப்பட்ட இயக்கங்களுள் அடங்குவன. 20 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் தொடங்கி, மனித உரிமைகள் இயக்கம், போர் எதிர்ப்பு இயக்கங்கள், சூழலியல் இயக்கங்கள் போன்ற மேலும் பல இயக்கங்கள் ‘இடதுசாரி’ என்னும் சொல்லினால் குறிக்கப்படலாயின. ஐக்கிய அமெரிக்காவின் மக்களாட்சிக் கட்சி, தொழிற் கட்சி. ஆகியவை இடதுசாரி இயக்கங்கள் என அழைக்கப்பட்டன. 

இந்த வலது இடது என்கிற சிந்தனைப் போக்கு, பாகுபாடு முரண்பாடு என்று மக்களைத் தொடர் அழுத்தத்திலேயே வைத்துக் கொள்ளவே பயன்பட்டு வருகின்றன. ஆரியர் வரவுக்கு முந்தைய தமிழகத்தில் தனிமனிதச் சான்றோர்கள் முன்னெடுத்து ஒட்டுமொத்த சமூகம் கொண்டாடிக் கொள்ளும் வகையான வலது என்று சொல்லப்படுகிற மதங்களோ, இடது என்று சொல்லப்படுகிற மார்க்சியம் போன்ற அறக்கருத்துக்களோ மக்களை வழிநடத்திடவில்லை. 

மாறாக மக்கள் பயணிக்கும் பாதையில், சமூகத் தொடர்பு மற்றும் சிந்தனைக் கருவியான மொழிக்கு சங்கம் வைத்து, அந்தக் கூட்டுச் சிந்தனையில் கிடைக்கப் பெற்ற- மொழிக்கு எழுத்து மற்றும் சொல் இலக்கணமும், வாழ்க்கைக்குப் பொருள்  இலக்கணமும் தமிழ் மக்களை வழிநடத்தி வந்து கொண்டிருந்தது. அதனாலேயே தமிழ்முன்னோரால் மட்டுமே முற்றிலும் சமூக நோக்கம் சார்ந்த உலகின் முதல் அணைக்கட்டைச் சிந்திக்கவும், கட்டவும் முடிந்தது. 

அதனாலேயே தமிழ்முன்னோர் இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தௌ;ளியராதல் வேறு என்று இந்த வலது இடது இரண்டையும் இயல்பானது என்று தெரிவித்து, யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று, இந்த இரண்டிலும் நின்று தீமைகளை விளைவிக்கவோ பெற்றிடவோ வேண்டாம் என்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.