Show all

ஒரே மேடையில் மோடியும் மம்தாவும்!

சுபாஷ் சந்திரபோசின் 125ஆவது பிறந்த நாள் விழா அரசு நிகழ்ச்சியில், மம்தா பானர்ஜி-மோடி இருவரும் ஒரே மேடையில் பங்கேற்ற நிலையில்,  பாஜகவினர் மம்தா பானர்ஜி சினத்தைத் தூண்ட, மம்தா பானர்ஜி பதிலடி கொடுக்க… சில நிமிட சலசலப்போடு விழா முன்னெடுக்கப்பட்டது. 

10,தை,தமிழ்த்தொடராண்டு-5122: சுபாஷ் சந்திரபோசின் 125ஆவது பிறந்த நாள் விழா கொல்கத்தா விக்டோரியா நினைவு அரங்கிற்கு வெளியே அரசு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிகழ்ச்சியில் இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியுடன் வங்காள மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி உரையாற்றுவார் என்று நிகழ்ச்சி நிரலின் படி அழைப்பு விடுக்கப்பட்டது. 

மம்தா பானர்ஜி உரையாற்ற எழுந்து வரும்போது, பாஜக தொண்டர்கள், ஜெய் ஸ்ரீராம் என்றும், பாஜக கட்சிக்கான வேறு சில முழக்கங்களையும் ஒலிக்கத் தொடங்கினர். இதனால் சினமுற்ற மம்தா பானர்ஜி ஒலிவங்கி முன்வந்து, முழக்கமிட்டவர்களை நோக்கி அவமானப்படுத்தாதீர்கள் அரசு விழாவுக்கு என்று ஒரு கண்ணியம் இருக்கிறது. இது அரசியல் நிகழ்ச்சி கிடையாது. நிகழ்ச்சிக்கு வருமாறு வரவேற்று விட்டு இங்கு வந்த பிறகு என்னை அவமானப்படுத்துவது சரி கிடையாது. இது ஒரு கலாச்சார நிகழ்ச்சிதான், மக்களின் நிகழ்ச்சி. அரசியல் நிகழ்ச்சி கிடையாது. அப்படியிருந்தும் உங்கள் செயல்பாடு மோசமாக இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நான் இப்போது உரையாற்ற போவது கிடையாது. என்று கூறிவிட்டு வாழ்க இந்தியா மற்றும் வாழ்க வங்காள தேசம் என்று முழக்கமிட்டுவிட்டு மம்தா அமர்ந்து விட்டார். 

இதனால் விழாவில் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மோடி பேசியபோது மம்தா பானர்ஜியின் சீற்றத்திற்கான காரணத்தை தெரிவித்து, பாஜக தொண்டர்களுக்கு எச்சரிக்கை ஏதும் தெரிவிக்காதது மாநில அதிகாரிகளால் அறநெருக்கடியாக உணரப்பட்டது. 

பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே மேற்கு வங்க மாநிலத்தில் கடும் அரசியல் போட்டி நிலவி வருகிறது. இன்னும் சில மாதங்களில் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்தான் மம்தா பானர்ஜி-மோடி இருவரும் ஒரே மேடையில் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பெற்றது. பாஜகவினர் மம்தா பானர்ஜி சினத்தைத் தூண்ட, மம்தா பானர்ஜி பதிலடி கொடுக்க, சுபாஷ் சந்திரபோசின் 125ஆவது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி, சில நிமிட சலசலப்போடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.