இந்தியாவில் இருந்து தடுப்பு மருந்து வருவதில் தாமதம் காரணமாக இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. 21,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவிசீல்டு கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. இந்திய அரசு இலவசமாக வழங்கிய 5 லட்சம் கோவிசீல்டு எண்ணங்களுடன், தடுப்பூசி போடும் பணியை மூன்று மாதங்களுக்கு முன்பு இலங்கை தொடங்கியது. மேலும் அதிகமான தடுப்பூசிகளுக்கு இந்தியாவின் சீரம் நிறுவனத்துக்கு இலங்கை அரசு வாங்குதல் கொடுத்திருந்தது. ஆனால் அண்மைக் கிழமைகளாக தடுப்பூசி ஏற்றுமதியை சீரம் நிறுவனம் நிறுத்தியுள்ளது. இவ்வாறு இந்தியாவில் இருந்து தடுப்புமருந்து வருவது தாமதமாகியுள்ள நிலையில், கைவசமுள்ள தடுப்பூசிகளை, முதல் எண்ணம் போட்டவர்களுக்கு 2-வது எண்ணம் போட பயன்படுத்த முடிவெடுத்து, தடுப்பூசி போடும் பணியை இலங்கை அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. முதல் எண்ணம் போட்ட 12 கிழமைகளுக்குள் 2-வது எண்ணம் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று உலக நலங்கு நிறுவனம் தெரிவித்திருப்பது நினைவில் கொள்ளத்தக்கது. கடந்த புதன்கிழமை இரவு முதல் கொரோனா தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டிருப்பதாக இலங்கை தொடக்க நலங்குத்துறை அமைச்சர் சுதர்சனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அடுத்தகட்டமாக எப்போது இந்தியாவில் இருந்து தடுப்பூசிகள் வரும் என்ற எந்த உத்தரவாதமும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், தங்கள் நாட்டில் பணிபுரிந்து வரும் சீனர்களுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்படும் என்று இலங்கை நலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கிழமை, சீனா தனது 6 லட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கைக்கு இலவசமாக வழங்கியுள்ளது. ஆனால் அதன் விரைவுக்கால பயன்பாட்டுக்கு உலக நலங்கு நிறுவனம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.