ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டில் நடந்த 12 மணி நேர வருமானவரித் துறையினரின் சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்று தகவல் தெரிய வருகிறது. 20,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டில் சுமார் 12 மணி நேரமாக நடந்த வருமான வரிச்சோதனை நிறைவு பெற்றுள்ளது. சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. வீட்டுச் செலவுக்காக ரூ 1.36 லட்சம் மட்டுமே இருந்தது என்றும் கூறப்படுகிறது. அதையும் வங்கி கணக்கை காட்டியதால் அதிகாரிகள் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பக்க பலமாக இருந்து வருகிறார் அவரது மருமகன் சபரீசன். அவரது வீட்டில் வருமானவரித் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சபரீசனின் வீடு அலுவலகம் உள்பட அவருக்கு சொந்தமான 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 12 மணி நேரம் வரை சோதனை நடத்தினார்கள். இதேபோல் கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் அத்தோடு அண்ணா நகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக் வீட்டிலும் சோதனை நடத்தினர். ஒரே நாளில் பல்வேறு திமுகவினர் வீடுகளில் அடுத்தடுத்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. திட்டமிட்டு தேர்தல் நேரத்தில் இப்படிச் சோதனை நடத்தப்படுகிறது. இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று திமுகவினர் பதிலடி கொடுத்துள்ளனர். மேலும் வருமான வரித்துறை சோதனைக்கு எதிராக திமுக சார்பாக தலைமை தேர்தல் ஆணையத்தை நாடியது. திமுகவினர் மீதான வருமான வரி சோதனை என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி திமுகவின் வெற்றிவாய்ப்பை பறிக்க அதிமுக- பாஜக முயல்கிறது என்று புகார் அளித்துள்ளது. இந்த சோதனை குறித்து கருத்து கூறியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களிடம் ஆதரவில்லை, படுதோல்வி உறுதி என்ற நிலையில் வழக்கம் போல பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. மிரட்டலுக்கு பயந்து அடிமையாய் காலில் விழ நாங்கள் அதிமுக அல்ல. இதற்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்றார். திமுக முன்னாள் அமைச்சர் வேலு வீட்டில் தொடங்கப்பட்ட சோதனை இப்போது ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீடு வரை நீண்டுள்ளது. பல்வேறு முன்னாள் அமைச்சர்கள், திமுக வேட்பாளர்களை குறிவைத்து நடத்தப்படும் சோதனையில் இதுவரை என்ன கைப்பற்றப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பாடாக எந்த தகவலும் இல்லை. இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் நடந்த வருமான வரிச்சோதனை இரவு 8 மணி அளவில் நிறைவு பெற்றது. சுமார் 12 மணி நேரமாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.