Show all

1200க்கும் மேற்பட்ட கைதிகளை இயற்கை விடுவித்தது! இந்தோனேசியாவில் நில நடுக்கத்தால் இடிந்த சிறைகள்

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நிலநடுக்கம், ஆழிப்பேரலை, எரிமலை வெடிப்பு என இயற்கை பேரிடர்கள் அதிகம் நடக்கிற நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. இந்த நாடு பசிபிக் நெருப்பு வளையத்தில் புவித்தட்டுகள் மோதிக்கொள்கிற இடத்தில் அமைந்துள்ளதால், எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகிறது. இந்த நிலையில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் என கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. பீதியில், வீடுகளுக்குள்ளும், பிற கட்டிடங்களுக்குள்ளும் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு, சாலைகளுக்கும், திறந்தவெளி திடல்களுக்கும் ஓடினர். 

3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆழிப்பேரலையில் அகப்பட்ட ஏராளமானவர்களை இன்னும் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று கருதப்படுகிறது.

இந்தநிலையில்,  சுலாவேசியில் உள்ள பலு மற்றும் டோங்கலா ஆகிய இடங்களில் இருக்கும் சிறைகள் நிலநடுக்கத்தால் தரைமட்டமாயின. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 1200 கைதிகள் சிறைகளிலிருந்து தப்பி காணாமல் போயிருக்கிறார்கள் என்று அந்நாட்டு அறங்கூற்றுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

டோங்கலாவில் நில நடுக்கத்தினால் தீ விபத்தும் ஏற்பட்டதால் அங்கிருந்த அனைத்து கைதிகளையும் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான கைதிகள் ஊழல் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றவர்களாம். 5பேர் நில நடுக்கம் ஏற்படுவதற்கு சில நாட்கள் முன்பு பயங்கரவாதப் புகாரின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டவர்களாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,927.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.