சூயஸ் கால்வாயின் நடுவே சிக்கிக் கொண்டிருக்கும் உலகின் பேரளவுக் கப்பல்களில் ஒன்றான எவர் கிரீனை ஒட்டிச் சென்றவர்கள் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கப்பலில் உள்ள அனைவரும் இந்தியர்கள் என்றும் பத்திரமாக உள்ளார்கள் என்றும் கப்பலை நிர்வகிக்கும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகின் பேரளவுக் கப்பல்களில் ஒன்றான எவர் கிரீன் சூயஸ் கால்வாயின் நடுவே சிக்கிக் கொண்டிருக்கிறது. எவர் கிரீன் கப்பல் சிக்கியிருப்பதால், நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் சுயஸ் கால்வாயில் அணிவகுத்து நிற்கின்றன. சூயஸ் கால்வாய் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், உலகின் பொருளாதாரத்தையே புரட்டி போடும் அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் பேசப்படுகிறது. ஏனெனில் இந்த வழியாகத்தான் உலகின் 12விழுக்காடு வணிகம் நடைபெறுகிறது. மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள சூயஸ் கால்வாய் எகிப்தில் இருக்கிறது. உலகின் மிக முதன்மையான கடல் வணிகப் பாதையான இந்த கால்வாய் 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்டது. ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியானது இந்த சூயஸ் கால்வாய் தான். இந்தக் கால்வாய் மட்டும் இல்லை என்றால் ஆசியாவில் இருந்து ஆப்பிரிக்கா வழியே ஐரோப்பாவுக்கு செல்ல சுமார் 34 நாட்கள் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் சூயஸ் கால்வாய் வழியாகத்தான் ஆசியாவில் இருந்து ஐரோப்பியாவிற்கு கப்பல்கள் பயணிக்கின்றன. ஒரு ஆண்டுக்கு 15000 கப்பல்கள் சூயஸ் கால்வாயில் பயணிக்கின்றன. சீனாவிலிருந்து நூற்றுக்கணக்கான கொள்கலன்களை ஏற்றிக் கொண்டு நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரை நோக்கி எவர் கிரீன் என்ற பேரளவுக் கப்பல் புறப்பட்டு சென்றது. இந்தக் கப்பல் சுமார் 400 மீட்டர் நீளத்துடன், 59 மீட்டர் அகலம் உடையது. கப்பல் மலேசியா வழியாக வந்து திங்கட் கிழமை எகிப்திலுள்ள சூயஸ் கால்வாயை வந்தடைந்தது. செவ்வாய்க் கிழமை காலை 7.45 மணி அளவில் சூயஸ் கால்வாயில் சென்ற போது- திடீரென வீசிய அந்த அதிவேகப் புயல் எவர் கிரீன் கப்பலை தள்ளாட வைத்தது. கட்டுப்பாட்டை இழந்த கப்பல் கால்வாயின் குறுக்கே நகர முடியாமல் சிக்கிக் கொண்டது. அதாவது கப்பலின் முன்பகுதி கரையின் ஒரு புறத்திலும், கப்பலின் பின் பகுதி கரையின் மறுபுறமும் தொட்டு சாலையின் நடுவே குறுக்காக நிற்கும் லாரியைபோல் கால்வாயின் குறுக்கே சிக்கிக் கொண்டது எவர் கிரீன்கப்பல். எவர் கிரீன் கப்பல் சிக்கி கொண்டதால் அந்த வழியாக இருபுறங்களிலும் 150க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் பயணிக்க முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன. எவர் கிரீன் கப்பலை ஒட்டி வந்தவர்கள் இந்திய மாலுமிகள் என்பதும் கப்பலில் பயணித்த அணி மொத்தமும் இந்தியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. கப்பலில் 25 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக, எவர் கிரீன் கப்பலை நிர்வகித்து வரும் நிறுவனம் தெரிவித்துள்ளது சூயஸ் கால்வாய் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான முதன்மையான கடல் இணைப்பாக உள்ளது. இந்தக் கால்வாயில் போக்குவரத்து விரைவில் சரியாகாவிட்டால், கப்பல்கள் ஆப்பிரிக்காவின் தெற்கே முனைக்கு சென்று பின்னர் ஐரோப்பாவுக்குச் செல்ல வேண்டும். ஏனெனில் வேறு மாற்றுவழி என்பதே இல்லை. அப்படி சென்றால், மேலும் இரண்டு கிழமைகளுக்கு மேல் ஒவ்வொரு கப்பலும் தாமதமாக செல்லும் அபாயம் ஏற்படும் என்று தெரியவருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.