சீனா முன்னெடுத்திருக்கும் புதிய குமுகச் சட்டத்தின் முதல் பயனாளியாக, ஐந்தாண்டுகள் வாழ்ந்து பிரிந்த குடும்பத்தலைவிக்கு, அந்தக்காலக் கட்டத்தில் அவர் மேற்கொண்ட வீட்டுப்பணிகளுக்கு கணவர் இழப்பீடு கொடுக்க உத்தரவிட்டது சீன அறங்கூற்றுமன்றம் 13,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: சீனாவில் பெய்ஜிங்கில் உள்ள அறங்கூற்றுமன்றம் ஒன்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த நாட்களில் மனைவி செய்த வீட்டுப் பணிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு கணவனுக்கு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் புதிய குமுகச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. ஐந்து ஆண்டு திருமண காலத்தின் போது செய்த பணிகளுக்கு, அந்தப் பெண் 50,000 சீன யுவானை இழப்பீட்டுத் தொகையாகப் பெறவிருக்கிறார். இது இந்திய மதிப்பில் ஐந்து இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாய் ஆகும். அதாவது மாதம் ரூபாய் ஒன்பதாயிரத்து முன்னூறு ஆகும். பெண்கள் வீட்டில் செய்யும் பணிகளுக்கான மதிப்பு தொடர்பாக, இந்த வழக்கு சமூக வலைதளங்களில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சிலர் இந்த இழப்பீட்டுத் தொகை மிகவும் குறைவு எனக் கூறுகிறார்கள். சென் என்கிற குடும்பப் பெயரைக் கொண்ட ஆண், வாங் என்கிற குடும்பப் பெயரைக் கொண்ட பெண்ணைக் ஐந்து ஆண்டுகளுக்கு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு சென், தன் மனைவி வாங்கிடமிருந்து மணவிலக்கு கேட்டு அறங்கூற்றுமன்றத்தில் பதிவு செய்திருந்திருக்கிறார். பாங்சாங் மாவட்ட அறங்கூற்றுமன்றம், வாங்குக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. சென் மாதாமாதம் 2,000 சீன யுவானை வாழ்க்கைப்பாட்டுக்கான ஆதரவுத் தொகையாக வழங்க வேண்டும் எனவும், அது போக 50,000 சீன யுவனை வாங் செய்த வீட்டுப் பணிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாகக் கொடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பு, இந்த ஆண்டு முதல் சீனாவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய குடிமைச் சட்டங்களின் படி வழங்கப்பட்டிருக்கிறது. அப்புதிய சட்டத்தின் படி, மணவிலக்கின் போது கணவன் அல்லது மனைவி, குழந்தை வளர்ப்பு, அகவைமுதிர்ந்தவர்களைக் கவனித்துக் கொள்வது, தங்களின் மனைவி அல்லது கணவனுக்கு அவருடைய பணிகளில் உதவுவது போன்ற பணிகளை கூடுதலாகச் செய்ததற்கு இழப்பீடு கேட்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. முன்பு திருமண ஒப்பந்தம் செய்து கொண்ட கணவன் அல்லது மனைவி மட்டுமே மணவிலக்கின் போது இப்படிப்பட்ட இழப்பீடுகளைப் பெற முடிந்தது. சீனாவில் இப்படிப்பட்ட ஒப்பந்தங்களை எல்லோரும் மேற்கொள்வதில்லை. இந்த தீர்ப்பு தொடர்பாக சீனாவின் வைபோ சமூக வலைதளத்தில் காரசார விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஐந்து ஆண்டுக்கு 50,000 யுவான் என்பது மிகவும் குறைவானது என சில சமூக வலைதள பயனர்கள் குறிப்பிடுகிறார்கள். “எனக்கு சொற்களே வரவில்லை, ஒரு முழு நேர மனைவியின் பணிகள் குறைத்து மதிப்பிடப்பட்டிருக்கிறது. பெய்ஜிங்கில் ஒரு உதவியாளரை ஓராண்டுக்கு வேலைக்கு எடுத்தாலே 50,000 யுவான்களுக்கு மேல் கொடுக்க வேண்டி இருக்கும்” என ஒருவர் தன் கருத்தைப் பதிவு செய்திருந்தார்.
முதலில் மணவிலக்குக்கு தயங்கிய வாங், பின் நிதி இழப்பீட்டைக் கேட்டார். சென் வீட்டு வேலைகளிலோ அல்லது குழந்தையை கவனித்துக் கொள்ளும் பணிகளிலோ பங்கெடுக்கவில்லை என வாதிட்டார் வாங்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.