இந்தியாவில் 15 நொடியில் விற்றுத் தீர்ந்த சீன பொருட்கள்! எகிறிய விற்பனை! கெத்து காட்டுகின்றன சீன நிறுவனங்கள். 59 சீனச் செயலிகள் தடையைக் கண்டுகொள்ள வில்லை சீன நிறுவனங்கள். 27,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் பாஜக அரசு நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் தொடங்கி தொடர்வண்டி ஒப்பந்தங்கள் வரை பலவற்றையும் சினாவுக்குக் கொடுக்கமாட்டேன் என்றது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆதிபகவன் பயன்பாட்டு கருவிகளுக்கு எல்லாம் கூடுதல் வரி விதித்தது. இதை எல்லாம் விட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. மக்கள் தேடலுக்கான, தரமான, விலை குறைவான, உற்பத்திகளுக்கான உத்தரவாதம் துளியும் இல்லாமல்- இந்தத்; தடை, வரி உயர்வு, சீன வணிகத்தை ஆதரிப்பது தேசத்துரோகம் என்பது போல கருத்துப் பரப்புதல், (மறைமுகமாக அச்சுறுத்தல்) ஆகிய நடவடிக்கைகள் மட்டுமே சீனாவை இந்தியச் சந்தையில் இருந்து வெளியேற்றிவிடும் என்று முயல்வது தவறான கணிப்பு என்பதை சில நடப்புகள் உணர்த்தியிருக்கின்றன. கடந்த கிழமைகளில் அமேசான், மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்ட இயங்கலை சிறப்பு விற்பனைகளை இந்திய மக்கள் வெற்றி பெறச் செய்த வகையில்- மக்கள் தங்களுக்கு சரிப்பட்டு வரும் விலையில் யார் பொருள் கொடுக்கிறார்கள் என்று தான் பார்த்து இருக்கிறார்களே ஒழிய, அந்த பொருளை சீனா கொடுக்கிறதா, இந்தியா கொடுக்கிறதா, ஜப்பான் கொடுக்கிறதா எனப் பார்க்கவில்லை. என்று தெரியவருகிறது. அமேசான் சிறப்பு விற்பனையில்- ஒன்ப்ளஸ் நார்ட் மிடுக்குப் பேசிகள் விற்றுத் தீர்ந்து விட்டனவாம். ரியல்மீயும் ஒரு சீன நிறுவனந்தான். இந்த நிறுவனத்தின் செல்பேசிகள் மற்றும் உதிரிகள் விற்பனை அதிகரித்து இருக்கிறதாம். வீட்டில் இருந்தே வேலை பார்க்க பயன்படும் எல்லாப் பொருட்களும் நன்றாக விற்பனை ஆகி இருக்கிறதாம். 400 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. விற்பனை தொடங்கி 15 நொடியில் காலியாகிவிட்டது என்கிறார் சியாமி இந்தியாவின் தலைவர் மனு குமார். சியாமி தான் 30.9 விழுக்காடு இந்திய மிடுக்குப்பேசி சந்தையை தன் வசம் வைத்திருக்கிறதாம். அதனைத் தொடர்ந்து விவோ 21.3 விழுக்காடும் ஒப்போ 12.9 விழுக்காடும், ரியல் மீ 10 விழுக்காடும் என இந்த பெரிய சீன தயாரிப்புகள் மட்டும், இந்திய மிடுக்குப்பேசி சந்தையில் சுமாராக 73 விழுக்காட்டை கையில் வைத்திருக்கிறார்களாம். தொலைக்காட்சியிலும் ஆதிக்கமே. டிசிஎல் நிறுவனத்தின் தொலைக்காட்சிகள் ப்ளிப்கார்ட்டில் விற்பனை தொடங்கிய முதல் நாளுக்குள்ளேயே விற்பனை ஆகிவிட்டதாம். டிசிஎல் கம்பெனியின் விற்பனை கடந்த ஆண்டை விட 47 விழுக்காடு அதிகரித்து இருக்கிறதாம். இதில் சீன புறக்கணிப்பு எங்கு இருக்கிறது என்று தான் தெரியவில்லை. சீன நிறுவனங்கள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு, நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட சாதனங்கள் சரியான விலைக்குக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஆகையால் தான் இது மாதிரியான பொருட்கள், இந்திய வாடிக்கையாளர்கள் நடுவே புகழ் பெற்று இருக்கின்றன என்கிறார் சீன நிறுவனத்தின் தலைவர். இயங்கலையில் மட்டும் அல்ல, கடைகளில் கூட சீன பொருட்களுக்கான விற்பனை வழக்கம் போலத் தான் இருக்கிறதாம். டெல்லி நகரத்தின் சாந்தினி சௌக், நேரு ப்ளேஸ், மும்பை நகரத்தின் லாமிங்டன் ரோட் எல்லாம் நம் சென்னையின் ரிச்சி ஸ்ட்ரீட் போல மின்னனுப் பொருட்களுக்கு என்றே இருக்கும் பகுதிகள். இங்கு கூட சீன பொருட்கள் வழக்கம் போல விற்பனை ஆகிறது என பிசினஸ் ஸ்டாண்டர்ட் ஒரு கட்டுரையில் சொல்லி இருக்கிறது. ஆக ஒட்டு மொத்தத்தில் சீன புறக்கணிப்பு இந்த மின்னணுப் பொருட்களுக்குப் பொருந்தவில்லை. மக்கள் வழக்கம் போல சீன பொருட்களை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.