Show all

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தமாட்டோம்! முதல்வருக்குப் பின்னால் அணிதிரளும் தமிழகம்

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தமாட்டோம், இரு மொழிக் கொள்கையே தொடரும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து அறிக்கை வெளியிட்டு அசத்தியுள்ள நிலையில், தமிழக முதல்வருக்குப் பாராட்டு தெரிவித்து, நடுவண் பாஜக அரசின் ஹிந்தித் திணிப்பு சூழ்ச்சிக்கான புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

19,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் பாஜக அரசு ஹிந்தித் திணிப்பு சூழ்ச்சிக்கான மாறுபட்ட வியூகமாக புதிய கல்வி கொள்கையை முன்னெடுத்துள்ளது. இதற்கு எதிர் வினையாக- தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தமாட்டோம்; இரு மொழிக் கொள்கையே தொடரும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து அறிக்கை வெளியிட்டு அசத்தியுள்ளார்கள். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: புதிய கல்விக்கொள்கையின் ஒரு கூறான மும்மொழி கொள்கையைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தமாட்டோம் எனும் தமிழக முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன்! மாநிலங்களின் தன்னாட்சி கல்வியுரிமைகளை மொத்தமாய் பறித்து மத்தியில் அதிகாரங்களைக் குவித்து ஒற்றைப் பாடத்திட்டத்தின் மூலம் தேசிய இனங்களின் வரலாற்றை மறைக்கும் ஒற்றைமயக் கல்விக் கொள்கையை மொத்தமாய் எதிர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கீச்சுவில் சீமான் பதிவிட்டுள்ளார்கள்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறுகையில், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது. இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது! 

மும்மொழி கொள்கையை நிராகரிப்பது மட்டும் போதாது. மும்மொழிக் கொள்கையை நிராகரிக்க தமிழக அரசு கூறியுள்ள அனைத்துக் காரணங்களும் 3, 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி கொள்கை தொடரும் என்;பதையும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தமது கீச்சுப் பக்கத்தில், இருமொழி கொள்கையே தமிழகம் ஏற்கும்: தமிழக அரசின் இந்தமுடிவை விசிக வரவேற்கிறது. பொதுமக்களின் உணர்வுகளையும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையும் ஏற்று தமிழக அரசு இந்த நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. 

ஆனால்,பிறபாதிப்புகள் பற்றி தமிழக அரசின் நிலை குறித்து எதுவும் இல்லை. உடனே சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை முற்றாக மறுதலிக்கவேண்டும். அதனை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.