Show all

தலையில் வெண்ணெய்யை வைத்து கொக்கைப் பிடிக்கிற திட்டமா! மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்கள் தயார்

சீனா சொல்லாமல் பரப்பிய ஒரு நுண்ணச்சு இன்று கொரோனாவாகவும் கோவிட்19 ஆகவும் உலகை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா சொல்லிவிட்டு களமிறக்கப் போகிறது மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்களை.

07,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவின் புளோரிடா மாகாண அதிகாரிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்களை பறக்கவிடும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

இந்தக் கொசுக்கள் டெங்கு, ஜிகா நுண்ணச்சு உள்ளிட்ட நோய்களை மனிதர்களுக்கு பரப்பும் கொசு வகைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட இந்த வகை கொசுக்கள் பறக்கவிடப்படவுள்ளன என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

எதிர்பார்க்காத பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் இந்த முயற்சியால் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததன் காரணமாக பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் பொது மக்களை கொண்டு நடத்தப்படும் “ஜுராசிக் பார்க் படத்தில் வருவது மாதிரியான பரிசோதனை" என்றும் இதனால் இயற்கை மண்டலத்துக்கு கடும் சேதம் ஏற்படக்கூடும் என்றும் செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வரும் நிறுவனமோ, அரசின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை சுட்டிக்காட்டி, இதனால் மனிதர்களுக்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களுக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கி சில மாதங்களே ஆன நிலையில், அடுத்த ஆண்டே புளோரிடா கீஸ் என்னும் பகுதியில் சுமார் 75 கோடி மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை பறக்கவிடும் திட்டத்திற்கான அனுமதியை உள்ளூர் அரசு அதிகாரிகள் வழங்கியுள்ளனர். 

கடந்த மே மாதம் பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு அமெரிக்காவில் செயல்படும் ஆக்ஸிடெக் என்னும் நிறுவனத்திற்கு ஓஎக்ஸ்5034 என்றழைக்கப்படும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்களை உற்பத்தி செய்வதற்கு அமெரிக்க அரசின் சுற்றுச்சூழல் அமைப்பு அனுமதி வழங்கியது.

அதாவது, இந்த ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்கள்தான் மனிதர்களுக்கு டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை பரப்புவதாக அறியப்படுகிறது.

பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களைக் கடித்து இந்த வகை நோய்களை பரப்பி வருகிற நிலையில்- இந்த திட்டத்தின்படி, விடுவிக்கப்படும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்கள் பெண் கொசுக்களுடன் கலக்கும்.

அந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்களுக்குள் இருக்கும் ஒருவித புரதம், பெண் கொசு மனிதர்களை கடிக்கும் நிலையை அடையும் முன்பே அவற்றை கொன்றுவிடும். ஆனால், பூக்களிலுள்ள தேனை மட்டுமே அருந்தும் ஆண் கொசுக்கள் தொடர்ந்து வாழ்ந்து அதன் மரபணுக்களை பரப்பிக்கொண்டே இருக்கும்.

இந்த முறையின் மூலம், காலப்போக்கில் ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்களின் அளவை குறைத்து அவற்றால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்ப்பாதிப்பை கட்டுப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று சொல்லப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று, புளோரிடா கீஸில் அடுத்த இரண்டாண்டுகளில் 75 கோடி மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை பறக்கவிடுவதற்கு அங்குள்ள கொசுக்கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்தத் திட்டத்திற்கு எதிராக சேன்ஞ்.ஆர்க் இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டுள்ள சுமார் இரண்டரை லட்சம் பேர், ஆக்ஸிடெக் நிறுவனம் அமெரிக்காவை சோதனை களமாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக தனது இணையதளத்தில் விளக்கம் அளித்துள்ள ஆக்ஸிடெக் நிறுவனம், இதே முறையை பிரேசிலில் தாங்கள் சோதனை முறையில் முயற்சித்து பார்த்ததாகவும் அதில் சாதகமான முடிவுகள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அடுத்த ஆண்டு செயல்படுத்துவதற்கு அமெரிக்க நடுவணரசின் அனுமதியை ஏற்கனவே பெற்றுவிட்டதாகவும், ஆனால் மாகாண மற்றும் உள்ளூர் அரசு நிர்வாகங்களிடமிருந்து இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.