Show all

இன்று காதலர் நாளாம்!

காதலர் நாள் என்று, காதலுக்கு வெறுமனே ஒற்றை நாள் ஒதுக்கி, இந்தத் தமிழ்மண்ணில் காதல் குறித்து பேசுவதென்பது கொல்லற் தெருவில் ஊசி விற்ற கதை என்கிற சொலவடையாகவே அமையும்.

02,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று காதலர் நாளாம். காதலுக்கு வெறுமனே ஒற்றை நாள் ஒதுக்கி, இந்தத் தமிழ்மண்ணில் காதல் குறித்து பேசுவதென்பது கொல்லற் தெருவில் ஊசி விற்ற கதை என்கிற சொலவடையாகவே அமையும்.

உலக இனங்களில் தமிழ் இனம் மட்டுமே- சங்கம் அமைத்து, கூட்டுச் சிந்தனையில், மொழிக்கு மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்து அதன் வழி வாழ்ந்து வருகிற இனமாகும். அதனால் எம் இனத்திற்கு- தனி மனிதச் சான்றோர் சிந்தனைகளில் முன்னெடுக்கப்பட்ட எந்த மதங்களும் தேவையற்றுப் போனது. அதனால் இன்று மத அடையாளத்தோடு வருகிற மோடி இந்தியத் துணைக்கண்டத்தின் தலைமைஅமைச்சரான போதும் தயங்காமல், ‘திரும்பிப் போ மோடி’ என்று முழங்குகின்றனர் தமிழர். 

எழுத்து சொல் என்று மொழிக்கும், பொருள் என்று வாழ்க்கைக்கும், சங்கம் அமைத்து, கூட்டுச் சிந்தனையில், இலக்கணம் வகுத்தவர் தமிழ்முன்னோர். அந்தப் பொருள் இலக்கணத்தை அகம் புறம் என்று இரண்டாகக் காட்டினர். அந்த அகத்தில் சரிபாதி களவு என்கிற காதல். மீதி கற்பு என்கிற குடும்பம்.
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
என்று நிபந்தனை ஏதும் இல்லாமல் காதலைக் கொண்டாடியவர் தமிழர். காதல் தமிழர் வாழ்வில் ஒரு பகுதி அன்று. 

இன்று சமூக அமைப்புகளும், ஆதிக்க அரசியலும் வாழ்க்கையையே சிக்கலாக்கி வரும் நிலையில், கல்வி, மற்றும் பொருளாதாரம் தேடுவதே வாழ்க்கையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் நிலையில், தமிழரும் கூட இந்த ஒரு நாள் காதலைக் கொண்டாட முனைகின்றனர். வாழ்க காதலர் நாள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.