டெல்லி தெருவில் உழவர்களை நாதியற்றவர்களாக போராட்டத்தில் நிறுத்திவிட்டு, இங்கே வந்து முரண்நிலை கதையாடலை முன்னெடுத்து வருகின்றார் கோன்மோடி. 02,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக கோன்- வேளாண் குடிகளைக் கொத்தடிமைகளாக்கி- உயரவேண்டிய நீரையும், வரப்பையும்- குறிப்பிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்க முன்னெடுத்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேளாண் குடிகள் தங்கள் வரப்புயர, நீர் உயர டெல்லியில் நடத்தும் போராட்டம் இன்று 81வது நாளாக தீவிரமடைந்து வருகிறது. இந்த வேளாண் பெருமக்களின் டெல்லி போராட்டத்திற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பேரறிமுகங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறும் வரை தங்களது போராட்டத்தைக் கைவிடப்போவது இல்லை என உழவர் சங்கங்கள் அறிவித்துள்ளன. மறுபுறம் ஒன்றிய பாஜக கோன், வேளாண் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனவும், சட்டத்தை திரும்ப பெற இயலாது என்றும் திட்டவட்டமாக கூறி வருகிறது. சாலைகளில் முள் வேலிகளுடன் கூடிய தடுப்பு சுவர்கள் அமைத்துக் கொண்டு திக்ரி எல்லைப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று சென்னை வந்தார் தலைமை அமைச்சர் மோடி. சென்னை வந்த தலைமைஅமைச்சர் மோடிக்கு அதிமுக, பாஜக கட்சியினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தலைமைஅமைச்சர் மோடி, வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என்று தமிழில் தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய மோடி, டெல்லியில் உழவர்கள் போராட்டம் வருத்தம் தருவதாக தெரிவித்தார். இந்த இடத்தில் அவர் வேடிக்கையை நிகழ்த்திக் காட்டினார். வேளாண்மை குறித்து அக்காலத்து அரசுக்கு அறிவுரை கூறுவதான அவ்வையாரின் பாடலை மோடி மேற்கொள் காட்டினார். அவ்வையார் எழுதிய “வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்” என்ற பாடலை மோடி மேற்கொள் காட்டியது என்பது- ‘புலவர்கள் திட்டுவார்கள் திட்டினால் துடைத்துக் கொள்வோம்’ என்பதாகவே அமைந்திருக்கிறது. ஒளவையார் வரப்பிலிருந்து தொடங்கி அரசில் முடித்து- அரசுக்கே அடிப்படை வேளாண்மை என்கிறார். ஆனால் இதை மேற்கோளாகக் காட்ட மோடிக்கு என்ன அருகதை இருக்க முடியும். ஒன்றிய பாஜக அரசு கோன், கார்ப்பரேட்டுகள் என்று தொடங்கி வரப்பையும் நிரையும் வீணடிக்க நெடுஞ்சாலை, மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் என்று தொடர்ந்து இறுதி இடத்தில் வேளாண் பெருமக்களை கொத்தடிமைகளாக நிறுத்த முயலும் அரசு அல்லவா ஒன்றிய பாஜக அரசு. இப்போது கூட டெல்லி தெருவில் உழவர்களை நாதியற்றவர்களாக போராட்டத்தில் நிறுத்திவிட்டு விட்டுத்தானே இங்கே வந்து முரண்நிலை கதையாடலை முன்னெடுத்து வருகின்றார் கோன்மோடி.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.