இலங்கை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியுள்ளது. வரலாற்று வெற்றியை தனதாக்கியது இராஜபக்ச உடன்பிறப்புகளின் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சி. 23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா பொதுஜன பெரமுன சாதனை வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது. 68 லட்சத்து 53 ஆயிரத்து 690 வாக்குகளை பெற்று சிறீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியை தனதாக்கிக் கொண்டது. மொத்தமுள்ள 225 உறுப்பினர் வாய்ப்;புகளில் 150 உறுப்பினர் வாய்ப்புகளைப் பெற்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுகொள்ள முடியும் என்ற நிலையில், சிறீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 145 உறுப்பினர் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 27 லட்சத்து 71 ஆயிரத்து 980 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்திக்கு 54 உறுப்பினர் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. தேசிய மக்கள் சக்திக்கு 4 லட்சத்து 45 ஆயிரத்து 958 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளை, அந்த கட்சிக்கு 3 உறுப்பினர் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இலங்கை தமிழரசு கட்சி 3 லட்சத்து 27 ஆயிரத்து 168 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதுடன், தமிழரசு கட்சிக்கு 10 உறுப்பினர் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. முன்னாள் தலைமைஅமைச்சர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இந்த முறை தேர்தலில் பெருந்தோல்வியை சந்தித்தது. இதன்படி, 2 லட்சத்து 49 ஆயிரத்து 435 வாக்குகளை பெற்று ஒரு உறுப்பினர் வாய்ப்பை மற்றுமே பெற்றுகொண்டுள்ளது. மற்றபடி:-
ஜாதிக்க ஜன பலவேகே - 2
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 2
தேசிய காங்கிரஸ் - 1
சிறீலங்கா சுதந்திர கட்சி - 1
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1
தமிழ் மக்கள் தேசியக் கட்சி – 1
என்பதாக உறுப்பினர் வாய்ப்புகளைப் பெற்றுள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.