கொரோனாவைக் குணப்படுத்துவதாக கூறி மக்களின் அச்சத்தையும், பீதியையும் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. 23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவை குணப்படுத்துவதாக கூறி மக்களின் அச்சத்தையும், பீதியையும் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா நுண்நச்சு- கடும்பரவலால் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்தியாவில் இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 41 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளர். இதனிடையே கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து விட்டதாக பலர் விளம்பரம் படுத்தி வருகின்றனர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து 100 விழுக்காடு குணமடைய வைக்கும் ஆயுர்வேத மருந்தைக் கண்டுபிடித்ததாக, கடந்த மாதம் அறிவித்தார் பதஞ்சலி நிறுவனத்தின் யோகா குரு பாபா ராம்தேவ். இந்த ஆயுர்வேத மருந்தை உட்கொண்டால் 7 நாட்களில் கொரோனா நோய் குணமடையும் என்றும் பதஞ்சலி நிறுவனம் அறிவித்தது. ஆனால், பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனா ஆயுர்வேத மருந்திற்கு, மருத்துவ குழுவினர் ஒப்புதல் அளிக்காத நிலையில், இந்த மருந்து குறித்து ஆய்வு செய்யும் வரை, அதனை விளம்பரம் படுத்தக்கூடாது என மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்தது. ஆனாலும், விற்பனையை நிறுத்த அரசு சார்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்காததால், தொடர்ந்து அந்த மருந்தை பதஞ்சலி நிறுவனம் விற்பனை செய்து வந்தது. பதஞ்சலியின் கொரோனா நோய் எதிர்ப்பு மாத்திரையான கொரோனிலுக்கு அன்றாடம் 10 லட்சம் கேட்புகள் வருவதாகவும், மருந்தை உட்கொண்டவர்கள் நோயில் இருந்து குணமடைந்து வருவதாகவும் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் நடுவண் அமைச்சகமும் கண்டம் தெரிவித்தது இந்தநிலையில், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி பதஞ்சலி நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் நிறுவனமும் பதிகை செய்த மனுக்கள் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கொரோனில் 92 பி என்ற பெயரை 27ஆண்டுகளுக்கு முன்பு அமிலத்தை கட்டுப்படுத்தும் மருந்தாக பதஞ்சலி நிறுவனம் பதிவு செய்துள்ளது. ஆனால் தற்போது மக்களுடைய கொரோனா அச்சத்தை பயன்படுத்தி, இதே மருந்தை தற்போது சந்தைப்படுத்தி உள்ளதாக அறங்கூற்றுவர் சி.வி.கார்த்திகேயன் குற்றச்சாட்டினார். எனவே, மக்களுடைய அச்சத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட முயற்சித்ததற்காக ரூ.10 லட்சம் அபராதம் விதித்து அறங்கூற்றுவர் உத்தரவிட்டார். மேலும், பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கொரோனில் மருந்து நோய் எதிர்ப்பு சக்தி மருந்து தானே தவிர, கொரோனாவை அது குணப்படுத்தாது என்றும் தீர்ப்பளித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.