Show all

விமானி உட்பட மூவர் பலி- பலர் படுகாயம்! ஏர் இந்தியா விரைவு விமானம் விபத்துக்குள்ளாகி கேரளத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விரைவு விமானம்- இரண்டு துண்டுகளாகியுள்ள பெரும் விபத்துக்குள்ளாகி கேரளத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விரைவு விமானம் விபத்துக்குள்ளாகி கேரளத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

இந்த விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட 185 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர். கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஓடுபாதை சரியாக தெரியாததால் ஓடுபாதையை விட்டு விமானம் விலகி உள்ளது. இந்த விமான விபத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், காயமடைந்த 35 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விமானத்தில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர்கள் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த முகமது ஜிதன் பைசல்பாபு, ஷானிஷா பைசல் பாபு, ஷாஜகான் ஆகியோர் பயணம் செய்துள்ளனர். விமான விபத்து குறித்து தகவல் பெற உதவி எண் 0495 2367901 வழங்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்து ஏற்பட்டத்தில் 2 பாகங்களாக உடைந்து உள்ளது. இரவு 7.30 மணிக்கு விமான விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விமான விபத்து நடைபெற்ற இடத்தில் 24 சடுதி வண்டிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

இந்த விபத்து நடைபெற்ற இடத்திற்கு அனைத்து துறை அதிகாரிகளும் சென்று உதவிட வேண்டுமென்று கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். அனைத்து விதமான மருத்துவ உதவிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். விமான விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா பரவலால் தாயகம் திரும்ப முடியாமல் வெளிநாட்டுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வரும் திட்டத்தின் கீழ் துபாய், சவூதி உள்ளிட்ட நாடுகளில் இருந்த இந்தியர்களை விமானம் மற்றும் கப்பல் மூலமாக தாயகம் கொண்டு வரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் துபாயில் இருந்து தாயகத்திற்கு பயணிகளை அழைத்து கொண்டு கோழிக்கோடு விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்கியது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கேரளாவே வெள்ளகாடாக காட்சியளிக்கும் நிலையில் கனமழையால் ஓடுதளத்தில் இறங்கிய விமானம் எதிர்பாராதவிதமாக சறுக்கி விழுந்தது. 

விமானிகள் இருந்த அறையும், விமானத்தின் முன்கதவும் கடுமையாக சேதமடைந்தது. இந்த விமானத்தை இயக்கிவந்;த விமானி தீபக் வசந்த் சதே. இவர் மும்பையை சேர்ந்தவர். இவருடன் இருந்த மற்றொரு விமானி ஆபத்தான நிலையில் உள்ளார். தீபக் மிகவும் கைதேர்ந்த விமானி என கூறப்படுகிறது. கேப்டன் தீபக் சாத்தே விமான படையின் முன்னாள் விமானியாவார். இவர் விமான படை அகாதெமியின் விருதை பெற்றுள்ளார். போர் விமானங்களை இயக்குவதிலும் நிறைந்த அனுபவம் மிக்கவர் என்று கூறப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.