Show all

வடமாநிலக் கொள்ளையர்கள்! சென்னையில் 14 பணம்வழங்கும் இயந்திரங்களில் 50 இலட்சம் வரை கொள்ளையடித்துள்ளனர்.

சென்னையில் இந்திய மாநில வங்கியின் பணம் வழங்கும் இயந்திரங்களில் லட்சக்கணக்கில் திருடிய வடஇந்தியக் கொள்ளையன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னையில் இந்திய மாநில வங்கியின் பணம் வழங்கும் இயந்திரங்களில் லட்சக்கணக்கில் திருடிய வடஇந்தியக் கொள்ளையன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

சென்னை வேளச்சேரி, விஜயநகர் இந்திய மாநில வங்கியின் பணம் வழங்கும் இயந்திரத்தில், 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருக்க வேண்டிய நிலையில், 8 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்துள்ளது.

இது குறித்து மேலாளர் சென்னை காவல்துறையில் புகார் கொடுத்தார். இதேபோல் தரமணி, எஸ்ஆர்பி டூல்ஸ் உள்ளிட்ட வங்கிகளிலும் வங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில் லட்சக்கணக்கில் பணம் மாயமானது கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் ஒரே ஆதாய அட்டையைப் பயன்படுத்தி வடமாநிலத்தை சேர்ந்த சிலர் சுமார் 50 லட்சத்திற்கும் மேலாக கொள்ளையடித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் தீவிரமாக விசாரிக்க தொடங்கினார்கள். பணத்தை திருடிய கும்பல் ஹரியானாவுக்கு தப்பி சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தி.நகர் துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படை காவலர்கள் உடனடியாக ஹரியானா சென்றனர். இந்த திருட்டில் தொடர்புடைய அமிர் அர்ஷ் என்ற குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூபாய் நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து காவலர்கள் கைது செய்யப்பட்ட அமிர் அர்ஷிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அந்த விசாரணையில், இந்த கும்பல் சென்னையில் கடந்த கிழமையில் 14 இடங்களில் இந்திய மாநில வங்கியின் பணம்வழங்கும் இயந்திரங்களில் சுமார் ரூ.45 லட்சம் பணத்தை திருடியுள்ளனர். இவர்கள் 5 பேர் குழுக்களாக இருந்துள்ளனர். இந்தத் திருட்டு குறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றவர்களையும் கைது செய்யும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.