Show all

மோசமாக நடத்திய கோபத்தில் செய்து விட்டாராம்! அரியானாவில் அறங்கூற்றுவர் மனைவியை சுட்டுக்கொன்ற பாதுகாவலர்

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரியானா மாநிலம் குருகிராமம் மாவட்ட கூடுதல் அறங்கூற்றுவர் கிருஷன் காந்த் சர்மா. இவரது மனைவி ரீத்து மற்றும் மகன் துருவ் ஆகியோர் நேற்று மாலை கடைவீதிக்குச் சென்றனர். அறங்கூற்றுவரின் பாதுகாப்பு அதிகாரியான மகிபால் சிங் என்பவரும் பாதுகாப்பிற்காக உடன் சென்றார். 

ரீத்துவும் அவர் மகன் துருவ்வும் பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பியபோது, திடீரென பாதுகாப்பு அதிகாரி மகிபால் சிங் தனது துப்பாக்கியால், அறங்கூற்றுவரின் மனைவி மற்றும் மகன் மீது கண்மூடித்தனமாக சுட்டார். அவர்கள் இருவரும் நிலைகுலைந்து கீழே விழுந்ததும், அவர்களை காருக்குள் தூக்கி போட முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை. எனவே, அதே காரில் அங்கிருந்து தப்பிச் சென்றார். 

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் இந்த சம்பவத்தை தங்கள் செல்போசிகளில் காணொளி எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற பாதுகாவலர், அறங்கூற்றுவரை பேசியில் அழைத்து துப்பாக்கியால் சுட்டதை கூறியிருக்கிறார். 

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த தாய்- மகன் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ரீத்து இன்று காலை உயிரிழந்தார். துருவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலரை காவல்துறையினர் கைது செய்தனர். இரண்டு ஆண்டுகளாக அறங்கூற்றுவரின் வீட்டில் பாதுகாவலராக பணியாற்றிய அவர், அறங்கூற்றுவரின் வீட்டில் உள்ளவர்கள் தன்னை மிகவும் மோசமாக நடத்தியதால், கோபத்;தில் துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,940.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.