Show all

கடமையைத் தொடங்கினார் வைகோ- பதவியேற்ற முதல் நாளில்! எதிர்பார்த்திராத நடுவண் துகில்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி

பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற முதல் நாளிலேயே, ஸ்மிருதி இரானி நடுவண் அமைச்சராய் உள்ள, துகில்துறையின் மீது தன் கேள்விக் கணையால் துல்லியத் தாக்குதல் நடத்திய வைகோ!

09,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மாநிலங்களவையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற முதல் நாளே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடுவண் அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் துல்லியக் கேள்விகளை எழுப்பினார்.

மாநிலங்களவையில் வைகோ இன்று பாராளுமன்ற உறுப்பினராக தமிழில் உறுதி மொழி எடுத்து பதவி ஏற்றார். இதனைத் தொடர்ந்து கேள்வி நேரத்தின் போது நடுவண் துகில்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம், வைகோ துணைக்கேள்வி கேட்டார்.


அப்போது பேசிய வைகோ,  23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அவையில் கன்னி உரையாக முதல் துணைக்கேள்வி எழுப்ப வாய்ப்பு தந்தமைக்கு நன்றி என்றார். அப்போது அவையில் இருந்த தலைமைஅமைச்சர் மோடி மேசையை தட்டி வரவேற்றார்.

தொடர்ந்து பேசிய வைகோ, ‘பருத்தி விலை, பஞ்சு விலை  திடீர் திடீரென மாறுவது ஒவ்வொரு ஆண்டும் நூற்பு ஆலைகளுக்கு நெருக்கடி சூழ்நிலை ஏற்படுகிறது. மூடப்பட்ட ஆலைகளால் இந்தியாவில் எத்தனை லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர் என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் தருவாரா? தமிழ்நாட்டில் நூற்பு ஆலைகள் சுற்றுச் சூழல் விதிகளை முறையாக பின்பற்றுகின்றன. ஆனால், மற்ற மாநிலங்கள் அப்படிப் பின்பற்றுவது இல்லை. இதனால் தமிழக நூற்பு ஆலைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் விதிகளை சமமாகப் பின்பற்ற அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?  என கேள்வி கேட்டார்.

வைகோ கேட்ட அந்த கேள்விகளுக்கு, அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் கூற மறுத்துவிட்டார்.

தொடர்ந்து பேசிய வைகோ, சீனாவில் இருந்து ஏராளமான ஆயத்த ஆடைகளை குறைந்த விலையில் வங்கதேசத்துக்கு அனுப்புகின்றனர். பிறகு வங்கதேசத்தினர், வங்கதேச நாட்டு முத்திரை பதித்து இந்தியாவுக்குள் கொண்டு வந்து குவிக்கின்றனர். இதனால் நமது நூற்பு ஆலைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதைத் தடுக்க நடுவண் அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்? என வைகோ கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஸ்மிருதி இரானி, அம்மாதிரி எதுவும் நடக்கவில்லை என்றார். உங்கள் பதிலில் திருப்தி இல்லை என வைகோ உடனடியாகத் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,224.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.