ஹிந்திதான், நாடுமுழுவதற்குமானமொழி என்று கூறுவதை நிறுத்த வேண்டும். இந்தியாவின் 22 தேசிய மொழிகளில் தமிழ், கன்னடத்தை போல ஹிந்தியும் ஒரு மொழிதான் என்று, அமித்சாவின் கீச்சுவிற்கு எதிராக தமிழகமும், கர்நாடகமும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. 28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஜகவிற்கு ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ள இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்சாவின் “நாடுமுழுவதற்குமானமொழிஹிந்தி” என்ற கீச்சுவிற்கு எதிராக, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர். அதுமட்டுமில்லாமல், சமூகவலைதளங்களில் #நிறுத்துஹிந்தித்திணிப்பை, #தமிழ்வாழ்க உள்ளிட்ட கீச்சுகள் இன்றைய தலைப்பாகி வருகின்றன. அமித்சாவின் கீச்சு தொடர்பாக கவிஞர் வைரமுத்து, பகலவன் கூட ஒட்டுமொத்த புவியை ஒரே பகலால் இணைக்க முடியவில்லை. ஹிந்தி மட்டும் இந்தியாவை எப்படி இணைத்துவிட முடியும்? என்று தனது கீச்சுப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். ஹிந்தி மொழி மட்டும் பேசும் நாடாக இந்தியா இருக்கவேண்டும் என்றால், அதில் தமிழ்நாடு மற்றும் வடகிழக்கு மாநிலங்களும் இருக்க முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்கத்திலேயே இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் எனத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. வேறுபாடுகள் நிறைந்த மாநிலங்கள் ஒன்றி இணைந்திருக்கும் இந்த பன்முகத்தன்மைதான் இந்தியாவின் மிகப்பெரிய வலிமை. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதே இந்தியாவின் பண்பாட்டு அடையாளம். பல்வேறு காரணங்களின் அடிப்படையிலான உள்நோக்கத்துடன், இந்த அடையாளத்தை சிதைத்து அழித்திடும் நடவடிக்கைகளை இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ள பாஜக அரசு அமைந்த நாள்முதலே மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக உள்துறை அமைச்சர் அமித்சா, ‘நாடு முழுமைக்கும் ஒரு மொழி என்பது மிகவும் அவசியம். அதுதான் உலகளவில் இந்தியாவிற்கான அடையாளத்தைத் தரும். அதிக மக்களால் பேசப்படும் ஹிந்திமொழிதான் அந்த அடையாளத்திற்குரிய மொழி’ எனக் கருத்து வெளியிட்டிருப்பது இந்தியாவில் மிகப் பெரும்பான்மையாக உள்ள ஹந்தி பேசாத மக்கள் அனைவரையும் ‘இரண்டாம் தர குடிமக்களாக்கும்’ முயற்சியாகவே தெரிகிறது. அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் சமத்துவத்துடன் பேணப்படவேண்டிய நிலையில், அதில் ஒரு மொழியான ஹிந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம் என்ற வகையில், இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில், நாட்டின் உள்துறை அமைச்சரே தன் கருத்தை வெளியிட்டிருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல கடும் கண்டனத்திற்குரியதுமாகும். அமித்சா தனது கருத்தை மறுபரிசீலனை செய்வது, இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் உகந்ததாக இருக்கும் எனக் கருதுகிறேன். எனவே அந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். பாஜகவிற்கு ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ள இந்தியாவின் தலைமை அமைச்சர் மோடி இது குறித்து தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனின், திமுகழகம் இன்னொரு மொழிப்போருக்கு ஆயத்தமாகும். தமிழ்நாட்டில் உள்ள நட்பு சக்திகள் மட்டுமின்றி, ஹிந்தி ஆதிக்கத்தால் உரிமைகளை இழக்கும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களையும் இணைத்து மக்களாட்சி போர்க்களத்தை சந்திக்க திமுகழகம் தயங்காது. குடிமைப்பணி, தொடர்வண்டித்துறை, அஞ்சல்துறை, வங்கிப்பணி என ஒவ்வொன்றாக ஹிந்தியைத் திணிக்க முயற்சித்து, இப்போது இந்தியா என்கிற ஒருமைப்பாடு நிறைந்த நாட்டுக்கு வேட்டு வைக்கும் வகையில், ஹிந்திதான் இந்தியாவின் அடையாளம் என்கிற குரல் ஒலிக்கிறது. நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க திமுகழகம் தயாராக இருக்கிறது. என்று கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,275.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.