Show all

அன்புமணி தெரிவிக்கிறார்! நீட் தேர்வு நீக்கம் குறித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது திமுக அரசின் கடமை

நீட் தேர்வு நீக்கம் குறித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது திமுக அரசின் கடமை என, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளைப் பறிக்கும் நீட் தேர்வை நீக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு ஆகும். அதற்காக சென்னையில் உண்ணாநிலை உள்ளிட்ட போராட்டங்களை எனது தலைமையில் பாமக நடத்தியிருக்கிறது.

தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை நீக்கம் செய்வோம் என்று சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையில், நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இது முந்தைய ஆட்சியில் முயற்சி செய்யப்பட்டு வெற்றி பெறாத திட்டம்தான்.

கடந்த முறை எந்த புள்ளிவிவரமும் இல்லாமல் சட்டம் இயற்றப்பட்ட நிலையில், இந்த முறை புள்ளிவிவரங்களைத் திரட்ட அறங்கூற்றுவர் ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும் இப்போது ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. 

தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள அறங்கூற்றுவர் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜகவின் நிர்வாகி ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கில் சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், நீட் தேர்வுக்கு எதிரான முயற்சிகள் வெற்றி பெறாதோ? என்ற ஐயத்தை மாணவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளன. மாணவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது, நீட் தேர்வை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுகவின் கடமை ஆகும்.

நீட் தேர்வை நீக்கம் செய்வதற்கான கடந்த ஆட்சியின் முயற்சிகளுக்கு பாமக ஆதரவு அளித்தது. நீட் தேர்வுக்கு எதிரான இப்போதைய அரசின் நடவடிக்கைகளுக்கும் பாமக முழு ஆதரவை அளித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான காரண காரியங்களை விளக்கி அறங்கூற்றுவர் ஏ.கே.ராஜன் குழுவிடம் விரிவான மனுவைத் பதிகை செய்துள்ளேன்.

அறங்கூற்றுவர் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தின் தலைமை அறங்கூற்றுவர் சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, 'உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இது தொடர்பான தீர்ப்பை பாதிக்கும் வகையில் எந்த மாநிலங்களும் முடிவெடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில், நீட் தேர்வை பாதிக்கும் வகையில் தமிழக அரசு குழுவை அமைத்துள்ளதே? இதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா?” எனக் கேள்வி எழுப்பியது.

அறங்கூற்றுவர் ஏ.கே.ராஜன் குழுவுக்கு உச்ச அறங்கூற்றுமன்றத்தின் அனுமதி பெறப்படாத நிலையில், சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டது செல்லாது என்று தீர்ப்பளிக்கக்கூடும். அது நீட் தேர்வை நீக்கம் செய்வதற்காகத் தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும்.

அத்தகைய சூழல் ஏற்பட்டால், தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்ந்து நடத்தப்படுமோ? ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவு நிரந்தரமாகக் கருகிவிடுமோ? என்ற மாணவர்களின் ஐயமும், அச்சமும் நியாயமானவைதான். அந்த அச்சத்தைப் போக்கவும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறவும், அடுத்தடுத்து என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன? என்பதைத் தமிழக அரசு விளக்க வேண்டும். மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க இது கட்டாயமாகும்.

நீட் தேர்வை நீக்கம் செய்வதாகக் கூறி ஆட்சிக்கு வந்ததுள்ளது திமுக. அதனால், எப்பாடுபட்டாவது நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டியதும், அதன் மூலமாக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியதும் திமுக அரசின் கடமையாகும். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

அறங்கூற்றுமன்றம் சட்டம் இயற்றும் அமைப்பு அல்ல. மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் சட்டங்களை இயற்றுகிற அமைப்புகளாகும். இந்த அமைப்புகள் இயற்றுகிற சட்டங்களின் அடிப்படையில் நாட்டின் அனைத்து நிருவாகமும் முன்னெடுக்கப்பட வேண்டும். நிருவாக முன்னெடுப்பில் ஏற்படுகிற பிழைகளைச் சுட்டிக்காட்டுவதும், திட்டமிட்ட பிழை முயற்சிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகளை உரிய அமைப்புகள் நிறைவேற்ற ஆணையிடுவது மட்டுமே அறங்கூற்று மன்றத்தின் பணிகளாகும். 

நீட் தேர்வை நடத்திட ஒன்றிய அரசு சட்டமியற்றுகிறது என்றால், நீட்தேர்வால் எங்களுக்குப் பயன் இல்லை; மாறாக பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கண்டறியப்பட குழு அமைக்கவும், அந்த அடிப்படையில் நீட் தமிழ்நாட்டிற்குத் தேவையில்லை என்று சட்டமியற்றவும் அதிகாரம் பெற்ற அமைப்புதான், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெறும் தமிழ்நாடு சட்டமன்றம் ஆகும்.

உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இது தொடர்பான தீர்ப்பை பாதிக்கும் வகையில் எந்த மாநிலங்களும் முடிவெடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என்பதெல்லாம், அரசியல்வாதிகளின் வெற்றுப் பூச்சாண்டிகளாகும். 

ஒன்றிய அரசின் கொள்கை முடிவின்படி, நீட் தேர்வு இந்தியாவில் நடத்திக் கொள்ளலாம். அதற்கான அமைப்புகளை ஒன்றிய அரசு உருவாக்கலாம். அதற்காக மாநில அரசுகளின் ஒத்துழைப்பை கோரலாம் என்றுதான் உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பு வழங்க முடியும். நீட் வேண்டும்- நீட் வேண்டாம் என்று, கொள்கைகளை மாற்றிக் கொள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு அதிகாரம் உண்டு. 

மக்களால், மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசால், மக்களுக்கு தேவையில்லாத, மக்களிடம் சமூக ஏற்றதாழ்வு பாதிப்பை எற்படுத்தும், நீட்தேர்வை எளிமையாக தூக்கி வீச முடியும் என்பதுதான் உண்மை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.