தலைநகர் டெல்லி, 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. குடியரசு நாள் விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தியக் கொடி ஏற்றுகிறார். 13,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய ஒன்றியத்தின் குடியரசு நாள் விழா, தலைநகர் டெல்லியில் இன்று இருபெரும் அறைகூவல்களுக்கு நடுவே நடக்கிறது. ஒன்று, கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்று பரவல். மற்றொன்று, வேளாண் சட்டங்களுக்கு எதிரான உழவர்கள் நடத்தி வருகிற தொடர் போராட்டமும், டிராக்டர் பேரணியும். குடியரசு நாள் விழா கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக, போர் நினைவுச் சின்னத்தில், நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். தலைமைஅமைச்சர் மோடி அங்கிருந்து நேராக அணிவகுப்பை பார்வையிடுவதற்காக விழா முதன்மைச்சாலைக்கு வருகிறார். அதைத் தொடர்ந்து விழாச்சாலைக்கு வருகை தருகிற குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு இந்தியக் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்துகிறார். அங்கு நாட்டுப்பண் இசைக்கப்படும். அதையடுத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மேடையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி மற்றும் தலைவர்கள் அமர்ந்து அணிவகுப்பை பார்வையிடுவார்கள். அணிவகுப்பில் முதல் முறையாக ரபேல் போர் விமானம் இடம் பெறுகிறது. இந்தியாவின் படை பலத்தையும், இந்திய மாநிலங்கள் பங்குகொள்ளும் பன்முகக் கலாசாரங்களை அடையாளப்படுத்தும் அணிவகுப்பு, நடத்தப்படவிருக்கிறது. கொரோனா நுண்நச்சுத் தொற்றால், குடியரசு நாள்விழா அணிவகுப்பை பல்லாயிரக்கணக்கான மக்களும், வெளிநாட்டு பேரறிமுகங்களும் கண்டுகளிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இந்த ஆண்டு, குடியரசு நாள்விழாவில் பங்கேற்க வரவிருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது நாட்டில் கொரோனா நுண்நச்சுப் பெருந்தொற்று பரவலால் டெல்லி பயணத்தை ரத்து செய்து விட்டார். இதனால் சிறப்பு விருந்தினர் இன்றி இந்த குடியரசு நாள்விழா நடைபெறுகிறது. காலை 9.50 மணிக்கு விஜய் சவுக்கில் இருந்து அணிவகுப்பு தொடங்குகிறது. இந்தியா திடல் நோக்கி அணிவகுப்பு செல்லும். ஒப்பனை ஊர்திகள் மட்டும் செங்கோட்டை வரை செல்லும். குடியரசு நாள் விழாவில் கண்காணிப்பு பணியில் 6 ஆயிரம் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஐயப்பாட்டிற்குரியவர்களை அடையாளம் காண முதன்மையான 30 இடங்களில் காவல் துறையின் முக அங்கீகார முறையும் அமைக்கப்பட்டுள்ளது. விழாச்சாலையில் 8 கி.மீ. தொலைவில் அணிவகுப்பு நடைபெறுவதால் அங்குள்ள உயர்ந்த கட்டிடங்களில் குறிபார்த்து சுடும் வீரர்கள் நிறுத்தப்படுகிறார்கள். சட்டம், ஒழுங்கை பேணல்வகைக்காக டெல்லியை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அணிவகுப்பு பாதையில் 140 கமுக்க கண்காணிப்பு படப்பிடிப்புக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. விழாச்சாலையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கொரோனா கால நெறிமுறைகைள பின்பற்றி 25 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். குடியரசு நாள் விழா நிகழ்ச்சியை தொடர்ந்து உழவர்களின் டிராக்டர் பேரணி நடைபெறுவதால், பல முனைகளிலும் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் நிறுத்தப்படுகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.