Show all

சசிகலா விடுதலை நாள், நேரம் உறுதியாகியுள்ளது! நாளை மறுநாள் இரவு 9.30 மணிக்கு

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா நாளை மறுநாள் இரவு 9.30 மணிக்கு விடுதலையாவதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது

12,தை,தமிழ்த்தொடராண்டு-5122: சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்தே சசிகலா விடுதலை செய்யப்படுகிறார்.

சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கோரி அவரது வழக்கறிஞர்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு விடுதலை தள்ளிப் போனது. ஆனால், நாளைமறுநாள் புதன்கிழமை பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா விடுதலையாவது உறுதி என்றும், அதற்கான அலுவல்பாடான கடிதம் கிடைத்துவிட்டதாகவும் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சசிகலா விடுதலை செய்யப்படவுள்ள நாளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கர்நாடக உள்துறைக்கு உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது. அதன்படி, வழக்கமான கைதிகளுடன் சசிகலாவை விடுதலை செய்யாமல் அவரது பாதுகாப்பு கருதி தாமதமாக விடுதலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மற்ற கைதிகள் இரவு 7.30 மணிக்கும், சசிகலாவை 9.30 மணிக்கும் விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, பெங்களூரு சிறையில் இருந்து பவுரிங் மருத்துவமனைக்கு சசிகலா அழைத்து செல்லப்பட்டார். அப்போது, சடுதிவண்டியில் இருந்து சக்கர நாற்காலியில் சசிகலா மருத்துவமனைக்குள் அழைத்து செல்லப்படும் காணொளி வெளியாகி தீயாகியது.

தொடந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சசிகலாவுக்கு உடல் நலம் தேறியதற்கிடையே, நள்ளிரவில் மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறால் ஏற்பட்டது. இதையடுத்து, மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட சசிகலா, அங்கிருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சசிகலாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இன்று காலை 8 மணிக்கு வந்த அறிவிப்பில் கொரோனா அறிகுறிகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் உயிர்வளி அளவு 98 விழுக்காடாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருடைய உயிர்வளி அளவு 79 விழுக்காடாக இருந்தது. தற்போது 98 விழுக்காடாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில், நாளைமறுநாள் புதன்கிழமை பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்தே சசிகலா விடுதலை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.