26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து, கடந்த ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர். வங்கி மோசடி தொடர்பாக நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. நீரவ் மோடிக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை கவனஅறிக்கையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் லண்டனில் மிகவும் சுதந்திரமாக சுற்றி வருவது தற்போது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி, அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதையும் தி டெலிகிராப் இதழ் செய்தியாக வெளியிட்டு உள்ளது. இவ்வாறு சொகுசாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்து வரும் நீரவ் மோடி, லண்டனில் வைர வியாபாரமும் செய்து வருவதாக அந்த இதழ் கூறியுள்ளது. இந்த விவகாரம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து ராகுல்காந்தி தனது கீச்சுவில் கூறியிருப்பதாவது: 'லண்டனில் நீரவ் மோடி வசிப்பதான காணொளி அவருக்கும், அவரது நண்பர் பிரதமர் மோடிக்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்துகிறது. இருவருமே இந்தியாவை கொள்ளையடித்தவர்கள். இருவரின் பெயரும் மோடி. இருவருமே எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மறுப்பவர்கள். இருவருமே சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என எண்ணிக் கொண்டு இருப்பவர்கள். இருவருமே விசாரணையை எதிர்கொண்டு வருபவர்கள்' என ராகுல் காந்தி கிண்டலாக பதிவிட்டுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,087.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.