இராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். பதவி விலகலுக்கான காரணம் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை இராகுல் காந்தி இன்று வெளியிட்டார். 18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியைத் துறக்க முடிவு செய்தார் இராகுல் காந்தி. அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் முதல்வர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள், ராகுலே தலைவராக தொடர வேண்டும் என்று பல்வேறு வழியில் தங்களது விருப்பங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், இராகுல் காந்தி தனது முடிவை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. இந்த நிலையில், இராகுல் காந்தி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘நான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை விட்டு விலகி விட்டேன். அதனால், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு விரைவில் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும்’ என்று மீண்டும் உறுதிபட தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, இராகுல் காந்தி தனது பதவி விலகலுக்கான காரணம் குறித்து விரிவான அறிக்கையையும் வெளியிட்டார். அந்த அறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக நடந்து முடிந்த தேர்தலின் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். கட்சியின் எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டு காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டு விலகுகிறேன். கட்சியை மறுகட்டமைப்பு செய்ய சில முதன்மையான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்தத் தோல்விக்கு பலரும் பொறுப்பேற்க வேண்டும். தோல்விக்கான பொறுப்பை தலைவராக நான் ஏற்காமல், மற்றவர்களை மட்டும் கூறுவது சரியாகாது. காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை நான் பரிந்துரைக்க வேண்டும் என்று சக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். கட்சியை வழிநடத்துவதற்கான புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது முதன்மைத்துவம் வாய்ந்தது என்பதால், அவரை நான் தேர்வு செய்வது சரியாக இருக்காது. தலைவர் பதவியை விட்டு நான் விலகிய நிலையில், கட்சிக்கான புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணியை தொடங்குமாறு செயற்குழு உறுப்பினர்களிடம் தெரிவித்துவிட்டேன். இந்த நடைமுறைக்கு எனது முழு ஆதரவையும் நான் அவர்களிடத்து தெரிவித்துள்ளேன். எனது போர் என்பது வெறும் அரசியல் அதிகாரத்துக்கான எளிமையான போர் அல்ல. பாஜக மீது எனக்கு எந்த வெறுப்புணர்வோ கோபமோ கிடையாது. ஆனால், இந்தியா குறித்து அவர்கள் கொண்டுள்ள சிந்தனைகளை என்னுள் இருக்கும் ஒவ்வொரு அணுவும் எதிர்க்கும். இந்த போர் ஆனது புதியது ஒன்றும் அல்ல. பல ஆயிரம் ஆண்டுகளாகவே நம் மண்ணில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் வேற்றுமையை பார்க்கும் இடத்தில் நான் ஒற்றுமையை பார்கிறேன். அவர்கள் வெறுப்புணர்வை பார்க்கும் இடத்தில் நான் அன்பை பார்கிறேன். அவர்கள் எதை கண்டு அஞ்சுகிறார்களோ, அதை நான் அரவணைக்கிறேன். தேசத்துக்கான அடையாளத்தையே சிதைக்கும் நோக்கத்துடன் தான், இந்தியா மற்றும் நமது அரசமைப்புச் சட்டத்தின் மீது தற்போது தாக்குதல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. நடந்த தேர்தலில் ஒரு அரசியல் கட்சியை எதிர்த்து போட்டியிடவில்லை. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த அமைப்புகளுக்கும் எதிராக போரிட்டோம். மொத்த அமைப்புகளும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக திரட்டப்பட்டன. இந்தியாவின் அமைப்புகளுக்கென்றே இருக்கும் நடுநிலைத்தன்மை என்பது தற்போது அறவே இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆர்எஸ்எஸ் அடையவேண்டிய இலக்குகளில், அமைப்புகளை கைப்பற்ற வேண்டும் என்பதும் ஒன்றாகும். அது தற்போது அரங்கேறிவிட்டது. நமது மக்களாட்சி அடிப்படையில் வலுவிழந்துவிட்டது. இந்தியாவுக்கான உண்மையான அபாயம் இனிமேல் தான் உள்ளது. தேர்தல்கள், இந்தியாவுக்கான எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் இருந்து வெறும் சடங்குகளை நோக்கி நகரக்கூடும். இப்படி அதிகாரத்தை கைப்பற்றுவது, கற்பனை செய்யமுடியாத அளவிலான வன்முறைகளில் சென்று முடியும். அது இந்தியாவுக்கு மிகப் பெரிய வேதனையை அளிக்கும். உழவர்கள், வேலையில்லாத இளைஞர்கள், பெண்கள், பழங்குடியினர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். நமது அமைப்புகளை மீட்டெடுத்து, அதை உயிர்ப்பிப்பதற்கு இந்திய தேசம் ஒன்றிணைய வேண்டும். அதை உயிர்ப்பிப்பதற்கான கருவியாக காங்கிரஸ் கட்சி இருக்கும். இந்த இலக்கை அடைவதற்கு, காங்கிரஸ் அடிப்படையில் மாற்றம் செய்ய வேண்டும். இந்திய மக்களின் குரல்களை பாஜக நசுக்குகிறது. அந்த குரல்களை பாதுகாக்கும் கடமை காங்கிரஸ் கட்சியுடையது. இந்தியா ஒருபோதும் ஒற்றை குரலாக இருந்ததில்லை, இருக்கவும் முடியாது. இந்தப் போரில் இருந்து நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். நான் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கைக்குரிய தொண்டன். இந்தியாவுக்காக தொடர்ந்து பணியாற்றி, எனது கடைசி மூச்சு வரை அதை பாதுகாப்பேன். எனக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து கடிதம் மற்றும் செய்திகள் அனுப்பிய ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கும் எனது நன்றி. காங்கிரஸ் கட்சிக்கு தேவையான சமயங்களிலும், அறிவுரை தேவைப்படும் நேரத்திலும் நான் எப்போதும் உடனிருப்பேன். 1.சிந்தாந்த ரீதியில் ஆழமாக எதிர்கொள்ளாமல், 2.அதிகாரத்துக்கான ஆசையை துறக்காமல் எதிரிகளை நம்மால் வீழ்த்த முடியாது. நான் காங்கிரஸ்காரனாக பிறந்தேன். இந்த கட்சி அனைத்து தருணங்களிலும் என்னுடன் இருந்துள்ளது. காங்கிரஸ் எனது ரத்தத்திலேயே ஊறிப்போய் உள்ளது. இது என்றைக்கும் நிலைத்திருக்கும்" என்று இராகுல் காந்தி தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,202.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



