12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது குறித்து நடுவண் அரசு எடுக்கும் முடிவை நாங்கள் மதிப்போம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார். காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் தமிழக வீரர்கள் இருவர் உள்ளிட்ட நடுவண் ஆயுதக் காவல்படையைச் சேர்ந்த 40 வீரர்கள் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலியாகினர். இந்த கொடுரத் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தத் தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுடன், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மோத இருக்கும் ஆட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்களில் ஒரு சிலர் வற்புறுத்தி உள்ளனர். அதேநேரத்தில் பாகிஸ்தானுடன் மோதி அந்த அணியை வீழ்த்தி வெளியேற்ற முயற்சிக்க வேண்டும் என்று சில வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் மோத வேண்டுமா? என்பது குறித்து ஆலோசிக்க கூடிய இந்திய கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் உரிய நேரத்தில் இந்த விசயம் குறித்து நடுவண் அரசுடன் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் பங்கேற்க விசாகப்பட்டினம் சென்றுள்ள இந்திய அணியின் தலைவர் விராட்கோலியிடம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதுமா? என்று கேட்டதற்கு பதில் அளிக்கையில், புல்வாமா தாக்குதலில் உயிரை இழந்த நடுவண் ஆயுதக் காவல் படை வீரர்களின் குடும்பத்துக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். நடந்த துயர சம்பவத்தால் இந்திய அணி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளது. எங்களது நிலைப்பாடு மிகவும் எளிதானது. நாடு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறதோ அதன்படி நாங்கள் நடப்போம். இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறதோ? அது தான் எங்களது அடிப்படை கருத்தாகும். இந்திய அரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் என்ன முடிவு எடுக்கிறதோ? அதன்படி நாங்கள் நடப்போம். அவர்கள் எடுக்கும் முடிவை நாங்கள் மதித்து செயல்படுவோம். இந்த விசயத்தில் இது தான் எங்களது நிலைப்பாடாகும் என்று தெரிவித்தார். பாகிஸ்தான் தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று ஒரு புறம் சொல்லப் பட்டாலும், காஷ்மீரின் மண்ணின் மக்களும் இந்த படுகொலையில் சம்பந்தப் படுத்தப் பட்டு இந்தியா முழுவதும் தாக்கப்பட்ட நிலையில், அறங்கூற்றுமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டு உச்ச அறங்கூற்றுமன்றம் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. முதலில் இந்த புல்வாமா தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள உண்மையான சதியை அம்பலப் படுத்த வேண்டியது நடுவண் அரசு மற்றும் ஊடகங்களின் கடமையாகும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,073.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



