Show all

குடியுரிமை சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு! தகிக்கும் திரிபுரா, அஸ்ஸாம், மேகலாயா மாநிலங்கள். தற்போது டெல்லியும்

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அஸ்ஸாம், மேகலாயாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மேற்கு வங்கத்திலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தற்போது டெல்லியிலும் பரவியுள்ளது போராட்டம். 

28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அஸ்ஸாம், மேகலாயாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மேற்கு வங்கத்திலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மேற்குவங்கத்தில் போராட்டக்காரர்களால் தொடர்வண்டி நிலையங்கள் சூறையாடப்பட்டன. தேசிய நெடுஞ்சாலையில் 15 பேருந்துகள் கொளுத்தப்பட்டன. 

கவுகாத்தியில் இன்று காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேலும் இருவர் பலியாகினர். இந்தப் போராட்டத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் இதுவரை 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா  பல்கலைக்கழக மாணவர்கள் இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக காணொளி ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தக் காணொளியில் காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தனர். பல்கலைக்கழக நுழைவு வாயிலைப் பூட்டிவிட்டு மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். காவல்துறையினரின் கண்களில்படாமல் இருக்க பல்கலைக்கழக வளாகத்துக்குள் இருந்த விளக்குகளை அனைத்துவிட்டோம். நாங்கள் விடுதியில் இருக்கிறோம். காவல்துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்துவதை கேட்க முடிகிறது. நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறோம் எங்களை காப்பாற்றுங்கள் என்று மாணவர்கள் கூறுகின்றனர்.

ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த வாசீம் அஹமது கான் பேசுகையில், காவல்துறையினர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய எந்த அனுமதியும் வழங்கவில்லை. கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துக்கின்றனர். பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேற நிர்பந்திக்கின்றனர் என்றார்.

பல்கலைக்கழகத்துக்குள் காவல்துறையினர் நுழைந்ததையடுத்து செய்தியாளர்கள் அங்கு விரைந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் கடுமையாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய செய்தியாளர் புஷ்ரா ஷேக், “செய்தி சேகரிப்பதற்காக இங்கு வந்தேன். காவல்துறையினர் என்னுடைய செல்பேசியைப் பிடுங்கி உடைத்துவிட்டனர். ஆண் காவலர் ஒருவர் என்னுடைய தலைமுடியைப் பிடித்து இழுக்கிறார். என்னுடைய பேசியைக் கேட்டதற்கு லத்தியைக் கொண்டு என்னை அடிக்கிறார். என்னிடம் தவறாக நடக்கிறார்கள். நான் இங்கு வேடிக்கைக்காக வரவில்லை. இங்கு நடப்பதை காட்சிப்படுத்துவதற்காக வந்துள்ளேன்” என கடுஞ்சினத்துடன் பேசினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,366.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.