நேற்று கூகிள் நிறுவனத்தின் கூகிள்பே செயலி திடீரென விளையாட்டுக்கடை செயலியிலிருந்து காணாமல் போனது. எதனால் கூகிள்பே செயலி திடீரென மயமானது என்று கடந்த மாதப் பஞ்சாயத்தையெல்லாம் இழுத்துப் போட்டு விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார்கள் இணைய ஆர்வலர்கள். 03,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நேற்று கூகிள் நிறுவனத்தின் கூகிள்பே செயலி திடீரென விளையாட்டுக்கடை செயலியிலிருந்து காணாமல் போனது. எதனால் கூகிள்பே செயலி திடீரென மயமானது என்று கூகிள்பே கீச்சுப் பக்கத்தில் ஏராளமான பயனர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்திய மிடுக்குப் பேசி பயனர்கள் பெரும்பாலோனாரின் பயன்பாட்டில் இருந்து வந்த ஹலோ செயலி, ஷேர்இட் செயலி, டிக்டாக் செயலி போன்ற பல சீனா தொடர்பான நிறுவனங்களின் செயலிகளை நடுவண் பாஜக அரசு இந்தியாவில் தடை செய்துள்ளது. நடுவண் அரசின் இந்த நடவடிக்கையின் காரணம் பற்றி, விளையாட்டுக்கடை செயலியிலிருந்து நேற்று திடீரென கூகிள் பே பயன்பாடு காணாமல் போனதும் இதை நடுவண் அரசே நீக்கியிருக்கக் கூடும்என்றே மக்கள் கருதினர். கூகிள்பே பயன்பாட்டை இந்தியாவில் அதிகப்படியானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சமூக ஊடகங்களில் கேள்விகளும், புகார்களும் காட்டு தீ போல நேற்று பரவ தொடங்கியது. இந்தியாவில் திடீரென கூகுள் பே தடை செய்யப்பட்டு விட்டதாக கடந்த மாதம் செய்தி வெளியாகியது. இந்த செயலி இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் விதிகளின் கீழ் செயல்படவில்லை. ‘தேசிய கொடுப்பனவுக் குழுமம் இந்தியா’ கட்டுப்பாட்டின் கீழ் இது செயல்படவில்லை என்று செய்திகள் வெளியானது. இதையடுத்து டெல்லி உயர்அறங்கூற்று மன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அதில் கூகுள்பே பாதுகாப்பாக இல்லை. அதைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வழக்கில் கோரப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை அறங்கூற்றுவர் டி.என். படேல் மற்றும் அறங்கூற்றுவர் பிரதீக் ஜலன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதில் ‘தேசிய கொடுப்பனவுக் குழுமம் இந்தியா’ விளக்கம் அளித்தது. தேசிய கொடுப்பனவுக் குழுமம் இந்தியா என்பது இந்தியாவில் இயங்கலை மூலம் நடக்கும் பணபரிமாற்றங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகும். முதன்மையாக போன்பே, பேடிஎம், கூகுள்பே போன்ற, ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகப் (யுபிஐ) பரிமாற்றங்களை மேற்கொள்ள இந்த ‘தேசிய கொடுப்பனவுக் குழுமம் இந்தியா’ கட்டுப்பாடுகளுக்கு அனுமதிகளை அளிக்கிறது. கூகுள்பே தொடர்பாக ‘தேசிய கொடுப்பனவுக் குழுமம் இந்தியா’ அளித்த விளக்கத்தில் கூகுள்பே என்பது மூன்றாம் தர பணப்பரிமாற்ற செயலி. கூகுள்பே ‘தேசிய கொடுப்பனவுக் குழுமம் இந்தியா’ விதிகளை பின்பற்றி செயல்படுகிறது. கூகுள்பே செயலியானது ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகப் பரிமாற்றத்தின் கீழ் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. முழு அனுமதியோடுதான் கூகுள்பே செயல்படுகிறது. கூகுள்பே செயலிக்கு இந்தியக்கட்டுப்பாட்டு வங்கி தடை விதிக்கவில்லை. அதோடு இந்த செயலி மற்ற ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகப் பரிமாற்றச் செயலிகளைப் போலவே மிகவும் பாதுகாப்பான செயலி ஆகும். இந்தியக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டே இதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது, என்று ‘தேசிய கொடுப்பனவுக் குழுமம் இந்தியா’ விளக்கம் அளித்துள்ளது. இதனால் கூகுள் பே செயலிக்கு இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி தடை விதித்துள்ளதாக சமூக வலைதளத்தில் பரவிய செய்திகள் போலி என்று உறுதி ஆகி உள்ளது. நாங்கள் அனைத்து விதிகளையும் பின்பற்றியேதான் செயல்படுகிறோம். இதில் முறைகேடு எதுவும் இல்லை, என்று கூகுள்பே நிறுவனமும் விளக்கம் அளித்திருந்தது. தற்போது கூகுள்பே செயலிக்கு வந்த அடுத்த பஞ்சாயத்;துக்கும் மறுத்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்குக் கூகிள் நிறுவனம் அதன் சார்பில் தனது அதிகாரப்பாட்டுக் கீச்சுப் பக்கத்தின் வழியாக அதன் பதிலை வெளியிட்டுள்ளது. இந்தச் சிக்கல் தற்காலிகமானது என்றும், அதைச் சரிசெய்வதில் ஊழியர்கள் பணியாற்றி வருவதாகவும் கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் இன்னும் சிலர் இதற்கும் தேசிய கொடுப்பனவு கழகம் இந்தியாவிற்கும், ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று கடந்த மாதப் பஞ்சாயத்தோடு பொருத்தி குழம்பியுள்ளனர். கூகிள் பே எப்போதும் பாதுகாப்பானது தான் பயனர்கள் பீதி அடைய இதில் பெரிய சிக்கல் எதுவும் இல்லை என்றும், பாதுகாப்பு குறித்த கவலை பயனர்களுக்கு எப்பொழுதும் வர வேண்டாம் என்றும் கூகிள் பே நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், இந்த திடீர் மாயம் களவாணிகள் சதியும் அன்று. இது வெறும் மென்பொருள் கோளாறு மட்டும் தான் என்று நிறுவனம் தெளிவாக தெரிவித்துள்ளது. கூகிள்பே எப்போதும் பாதுகாப்பானது தான் என்று உறுதி அளித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.