Show all

ஏமாற அணியமாக இல்லை, எல்லையில் போராடும் வட இந்திய உழவர்கள்!

உழவர்கள் கேட்பது மூன்று வேளாண் சட்டங்களில் இருந்து முழுமையாக விடுதலை என்ற நிலையில், அடிமைத்தனத்தை ஏற்கவைக்க ஆயிரம் சலுகைகளை அறிவித்துக் பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு. 

08,தை,தமிழ்த்தொடராண்டு-5122: வட இந்திய உழவர்கள் டெல்லி எல்லையில் போராடிக் கொண்டிருப்பது மூன்று வேளாண் சட்டங்களில் இருந்து முழுமையாக விடுதலைக்காக என்ற நிலையில், தங்கள் மூன்று வேளாண் சட்டங்களின் மூலம் உழவர்களின் மீது முன்னெடுக்கும் நிரந்தர அடிமைத்தனத்தை உழவர்களை ஏற்க வைக்க ஆயிரம் சலுகைகளை அறிவித்துக் பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு. 

அப்படி ஒரு புதிய சலுகையே, புதிய வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்திவைக்க அணியமாக இருப்பதாக ஒன்றிய பாஜக அரசு அறிவிக்கும் சலுகையாகும். இதை வேளாண் சங்க பேராளர்கள் ஏற்காததால், 10வது சுற்று கலந்துரையாடலுக்கு முடிவு எட்டப்படவில்லை.

ஒன்றிய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உழவர்கள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சங்கப் பேராளர்களுடன் ஒன்றிய பாஜக அரசு, கலந்துரையாடல் என்ற தலைப்பில் வேளாண் சட்டத்தை நிர்பந்தித்து வந்தது. இதை 9 சுற்று நடத்தியுள்ளது. ஆனால், இவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச அறங்கூற்றுமன்றம், புதிய வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால் அதன் மூலம் ஒன்றிய பாஜக அரசு முன்னெடுக்க முயலும் வேளாண் சட்டங்களில் இருந்து நிரந்தர விடுதலைக்கான விதையேதும் இல்லை என்கிற நிலையில் போராட்டத்தை கைவிட உழவர்கள் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், வேளாண் சங்கப் பேராளர்கள் மற்றும் ஒன்றிய அரசு இடையே 10-வது சுற்று கலந்துரையாடல் டெல்லி ‘இயல்அறிவு மாளிகை’யில் நேற்று மதியம் 2.45 மணிக்கு தொடங்கியது. ஒன்றிய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல், சோம் பர்காஷ் ஆகியோர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் 40 வேளாண் சங்கங்களின் பேராளர்கள் கலந்துகொண்டனர்.

புதிய வேளாண் சட்டங்களை 12 முதல் 18 மாதங்கள் வரை நிறுத்திவைக்க அரசு அணியமாக இருப்பதாக ஒன்றிய அமைச்சர்கள் தெரிவித்தனர். இதை தீர்வாக ஏற்காத உழவர்கள், 3 வேளாண் சட்டங்களை நீக்கம் செய்வது மட்டுமே இதற்கு தீர்வாக அமையும் என திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

இதனால், 10-வது சுற்று கலந்துரையாடலிலும் வேளாண் சட்டங்களுக்கு உழவர்கள் அங்கீகாரம் தர மறுத்துள்ளனர். இதையடுத்து, அடுத்த கட்ட கலந்துரையாடல் நாளை வெள்ளிக்கிழமை நடக்கும் என ஒன்றிய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, செவ்வாய்க் கிழமை வரும் குடியரசு நாளன்று போராடிவரும் உழவர்கள் அறிவித்துள்ள டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்கக் கோரி ஒன்றிய அரசு சார்பில் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் பதிகை செய்த மனு, தலைமை அறங்கூற்றுவர் எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட அறங்கூற்றுவர்கள், ‘‘உழவர்கள் பேரணிக்கு அனுமதி கொடுக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து டெல்லி காவல் துறைதான் முடிவு செய்ய வேண்டும். அதற்கான முழு அதிகாரம் காவல் துறையிடம் உள்ளது.
இந்தப்பாட்டில் அறங்கூற்றுமன்றம் தலையிடுவது முறையாக இருக்காது. டிராக்டர் பேரணிக்கு எதிரான மனு தொடர்பாக எங்களால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அதேநேரம், மனுவை கிடப்பில் போடவும் இயலாது. வேண்டுமெனில், இந்த மனுவை ஒன்றிய அரசு திரும்ப பெற்றுக் கொள்ளலாம்’’ என தெரிவித்தனர்.

அறங்கூற்றுமன்றம் உழவர்கள் பேரணிக்கு தடைவிதித்திருந்தால்,  காவல்துறை அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும். அறங்கூற்று மன்றம் பேரணிக்கு தடைவிதிக்காததால், உழவர்கள் பேரணியில் காவல்துறை அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அறங்கூற்றுமன்றம் விசாரித்து தண்டிக்க முடியும். என்று சட்ட வல்லுனர்கள் ‘இந்தப்பாட்டில் அறங்கூற்றுமன்றம் தலையிடுவது முறையாக இருக்காது’ என்பதற்கான விளக்கவுரை அளிக்கின்றனர்.  

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.