Show all

பாஜக சூழ்ச்சி வலையில் சிக்கி, சின்னாபின்னமாகப் போகிறதா திமுக! தமிழர்களை ஹிந்துக்களாக்கும் முயற்சியில் திமுகவினர்

ஹிந்துக்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய ஒரே இயக்கம் திமுகதான். கலைஞருக்கு அடுத்ததாக ஸ்டாலின் குரல்கொடுத்துவருகிறார். இப்படி நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில், திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி பேசியிருப்பதுதான், பாஜக விரித்த சூழ்ச்சி வலையில் திமுக விழுந்திருப்பதற்கான சாட்சி.

08,தை,தமிழ்த்தொடராண்டு-5122: சூழ்நிலைக்குத் தக்கவாறு மாறிக்கொள்வது சில நேரங்களில் தற்காலிக வெற்றியைத் தருவதுண்டு. 

அணை மதகு திறக்கப்படும் போது, மதகுவழி நீரோட்டத்தை எதிர்த்து அணையை நோக்கிச் செல்வதே மீன்களின் இயல்பு. ஆனால் நீரின் வேகத்தில் சிலமீன்கள் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டு அவைகளின் வாழ்க்கை கடலில் முடிந்துவிடும். புதிய இனப்பெருக்கத்திற்கு- கடல்சூழ்நிலை- அந்த அணை மீன்களுக்கு ஒத்துவராது. 

சிலமீன்கள் கடலுக்கு அடித்துச் செல்லப்படாமல் இடையில் அமைந்த குளம் குட்டைகளில் தங்கி குளம் குட்டை மீன்களாக வாழ்க்கையைத் தொடர்வது உண்டு. அந்த தற்காலிக வெற்றியை நோக்கி இந்தச் சட்டமன்றத் தேர்தலில் திமுக இயங்கும் பரிதாப நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. உண்மையில் இது சூழ்நிலையும் அல்ல. பாஜக விரிக்கும் சூழ்ச்சி வலையே.

ஹிந்துக்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய ஒரே இயக்கம் திமுகதான். கலைஞருக்கு அடுத்ததாக ஸ்டாலின் குரல்கொடுத்துவருகிறார். இட ஒதுக்கீட்டுக்காகக் குரல் கொடுத்து ஹிந்துக்களுக்கு நல்லது செய்தவர் கலைஞர். எங்களைப் பிரிக்க நீங்கள் எப்படி முயன்றாலும் முடியாது. நாங்கள் தமிழால் இணைந்தவர்கள். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காகவே உழைக்கும் ஸ்டாலினின் ஆட்சியை உருவாக்குவோம். விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில், திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி பேசியிருப்பதுதான், பாஜக விரித்த சூழ்ச்சி வலையில் திமுக விழுந்திருப்பதற்கான சாட்சி.

கடந்த ஆண்டு குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து, ராமநாதபுரம் சந்தைத் திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய கனிமொழி பெரும்பான்மை ஹிந்துக்கள் கோயிலுக்கு உள்ளே செல்ல முடியாது. வெளியிலேயே நிறுத்தப்படுகிறார்கள் என்று அவர்களுக்காகக் குரல் கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம். ஹிந்துக்களின் பாதுகாவலர் பெரியார்தான் எனப் பேசினார்.

அதேபோல, திருவள்ளூர் மாவட்டம், கோணாம்பேடு கிராமத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், என்னுடைய துணைவியார் போகாத கோயிலே கிடையாது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய பல மாவட்டச் செயலாளர்கள் நெற்றியில் குங்குமம் வைத்திருப்பார்கள். அந்தப் பக்தியை நாங்கள் குறை சொல்லத் தயாராக இல்லை. அது அவர்களுடைய விருப்பம். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது பேரறிஞர் அண்ணாவின் உறுதிமொழியாக இருந்தது. அதைத்தான் இன்று நாமும் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம் எனப் பேசினார். 

தலைவர் இப்படியென்றால், அந்தக் கட்சியின் நிர்வாகிகள், கடந்த நாடாளுமன்றத்தில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றிபெற்றது. அந்த வாக்குகளை அளித்தவர்களில் பெரும்பாலானோர் ஹிந்துக்கள். திமுக என்பது அதிகமான ஹிந்துக்களால் ஆதரிக்கப்படும் கட்சி என்று பேசி அதிர்ச்சி கொடுத்தனர். 

மேற்கண்ட அனைத்தும், திமுக ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி’ என முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலாகத்தான் பேசப்பட்டன. ஆனாலும் தமிழர்கள், திராவிடர்கள் எனப் பேசிவந்த திமுகவில் திடீரென ஹிந்துக்கள் என்ற சொல்லாடல், தமிழக அரசியல் களத்தில் மாறுபாடாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பாஜகவினர் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறார்களோ, அதற்கான வலையை வீசுகிறார்கள். திமுகவும் அதில் சரியாகப் போய்ச் சிக்கிக்கொண்டு இப்படிப் பேசி திமுகவிற்கான அடையாளத்தை இழந்துவந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இப்போது இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் பாஜகவுக்கே இது பயனளிக்கும்.

திமுக தொடங்கப்பட்ட காலத்தில், தமிழ் மொழிப்பற்று, இனப்பற்று, சமூகநீதிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அணிஅணியாக திமுகவுக்கு வந்தவர்கள்தாம் இன்றுவரை திமுகவை தங்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள். அண்மைக் காலங்களில் பதவிகளுக்காகக் கட்சியில் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால், திமுகவில் இணைந்தவர்கள் யாரும் தாங்கள் ஹிந்து என்பதால் அந்தக் கட்சியில் இணையவுமில்லை- இருக்கவுமில்லை- இருக்கப்போவதுமில்லை. கூடுதலாக, தங்கள் கட்சி உறுப்பினர்களையே ஹிந்துக்கள், முஸ்லிம்கள் எனப் பிரிப்பதென்பது திமுகவுக்கு வேண்டாத வேலை.

ஸ்டாலின் இப்படியென்றால், கனிமொழி அவரைவிட ஒருபடி மேலே பேசுகிறார். ஹிந்துக்களின் பாதுகாவலர் பெரியார் என முன்பு ஒருமுறை பேசினார். பெரியாரை ஹிந்துக்களின் காவலர் என்கிற வகைமைக்குள் கொண்டு வருவதெல்லாம், பெரியாரின், திராவிட இயக்கத்தின் கொள்கைக்கே நேர் எதிரானது. பெரியார், சாதிஅடிப்படையில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதற்கு எதிராகப் போராடினாரே தவிர, அவர்கள் ஹிந்துக்கள் என்பதற்காகப் போராடவில்லை. அதை நன்றாக உணர்ந்தவர்தான் கனிமொழியும். ஆனால், தேர்தல் அரசியலுக்காக இப்படிப் பேசுவது திமுகவை தமிழ்மக்களின் நெஞ்சங்களில் இருந்து அப்புறப்படுத்தவே உதவும். 

வட இந்திய மக்களைப்போல, மதப் பாகுபாடுகளுக்கும், மதப்பாட்டு முழக்கங்களுக்குமான, தூண்டுதல்களுக்கு, எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடியவர்கள் அல்ல தமிழக மக்கள். தமிழ்நாட்டில் ஹிந்து வாக்குவங்கி என்கிற ஒன்று இல்லவே இல்லை. அப்படி இருந்திருந்தால், அதை முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்த பாஜக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பலத்த வெற்றி பெற்றிருக்கும்.

கந்த சஷ்டி குறித்தப்பாடுகள், இரஜினி கிளப்பிய பெரியார் குறித்தப்பாடுகள், மனுஸ்மிருதி குறித்தப்பாடுகள்,  என்று ஏதாவது ஒரு மதம் குறித்தப்பாடுகளை மையப்படுத்தி, அதில் ஸ்டாலினை எதிர்வினை ஆற்றவைத்து, மத அரசியலுக்குள் திமுகவை இலகுவாகச் சிக்கவைத்துவிடுகிறது பாஜக. அவர்கள் வைக்கும் பொறிக்குள் ஸ்டாலினும் தானாகவே வந்து சிக்கிக்கொள்கிறார். தற்போது ஸ்டாலின் - கனிமொழி ஆகியோர் செய்துவருவது திமுக பாணி அரசியலே அன்று.

ஹிந்து’ என்கிற பெயரைப் பயன்படுத்த முடியாமல் அரசியல் செய்ய முடியாது என்கிற நிலையை பாஜகவினர் உருவாக்கிவிட்டனர். அவர்கள் நினைத்ததைச் சாதித்துவிட்டனர். ஆனால், அவர்களின் வழியில் சென்று தவறான வாதங்களை, அணுகுமுறைகளைக் கையாண்டு தமிழ்ச் சமூகத்துக்கு துரோகம் இழைத்துக்கொண்டிருக்கிறது திமுக.

கருணாநிதியின் காலத்திலேயே ஹிந்து விரோதி, ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி’ என்கிற விமர்சனங்கள் திமுக மீது வைக்கப்பட்டன. ஆனால், அப்போது அவர் எப்படிக் கையாண்டார் என்று ஸ்டாலின், கனிமொழி போன்றவர்கள் பார்க்க வேண்டும்.

திமுகவினரின் இந்த முழக்கங்களுக்குப் பின்னால், பிரசாந்த் கிசோரின் வழிகாட்டல் இருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், டெல்லியில் இப்படி ஒரு பொருள்நிரலை கையிலெடுத்துதான் அரவிந்த் கெஜ்ரிவாலை வெற்றிபெறவைத்தார் பிரசாந்த். எனவே, அதே பாணியை இங்கேயும் கையிலெடுக்கிறார். டெல்லிக்கு வேண்டுமானால், அது தேவைப்பட்டிருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் தேவையே இல்லை. கூடுதலாக, எதிர்காலத்தில் கொள்கைப்பாடாக, திமுகவுக்குப் பெரும் பின்னடைவாகவே இது அமையும். நடப்பில் திமுக வெல்வதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. அது தெரியாமல் திமுக தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.