Show all

தேர்தல் வரும் பின்னே, கருத்துக் கணிப்பு வந்தது முன்னே!

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற சொலவடைக்கு ஒப்ப, தேர்தல்கள் வருவதற்கு முன்பு கருத்துக் கணிப்புகள் வெளியாகி, தேர்தலை எதிர்நோக்கும் மக்களின் ஆர்வத்தை தூண்டுவது வழக்கம். தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் முந்தி வந்துள்ள கருத்துக் கணிப்பு குறித்து ஓர் அலசல்.

08,தை,தமிழ்த்தொடராண்டு-5122: யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற சொலவடைக்கு ஒப்ப, தேர்தல்கள் வருவதற்கு முன்பு கருத்துக் கணிப்புகள் வெளியாகி, தேர்தலை எதிர்நோக்கும் மக்களின் ஆர்வத்தை தூண்டுவது வழக்கம். தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் முந்தி வந்துள்ள கருத்துக் கணிப்பு ஏபிபி செய்தி நிறுவனம், சி-வோட்டர் ரிசர்ச் நிறுவனத்தோடு இணைந்து நடத்தி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு ஆகும். 

அண்மையில் நடத்தப்பட்ட ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சியாக உள்ள திமுக வரும் சட்டமன்றத் தேர்தலில் சிறப்பான வெற்றிபெறும் என்பதுதான் கருத்துக் கணிப்பின் இறுதி முடிவாக வெளியிடப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி இந்தத் தேர்தலில் 158 முதல் 166 இடங்கள் வரை வெற்றிபெற வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பு முடிவில் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல கடந்த தேர்தலைவிட, இந்தத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி 1.7 விழுக்காடு அதிகரிக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி இந்தத் தேர்தலில், 60 முதல் 68 இடங்கள் வரை கைப்பற்றும் என்று ஏபிபி கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன. இரண்டு கட்சிகளும் சேர்த்துப் பெற்ற வாக்கு விழுக்காடு 43.7 ஆகும்.

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 2 முதல் 6 இடங்களில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. அதிமுக வாக்குகளை அமமுக உடைக்கும் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 7.8 விழுக்காட்டு வாக்குகள் அமமுக பெறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

கமல்காசனின் மக்கள் நீதி மய்யம் சுழியம் முதல் 4 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது. 6.7 விழுக்காட்டு வாக்குகளை மக்கள் நீதி மய்யம் கவரும் என்ற தகவலும் கருத்துக் கணிப்பில் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் மிகவும் விரும்பப்படும் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது ஏபிபி. அதில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு 36.4 விழுக்காட்டு மக்கள் வாக்களித்துள்ளதாகவும், அதிமுகவின் தற்போதைய முதல்வரான எடப்பாடி பழனிசாமிக்கு 25.5 விழுக்காட்டு மக்கள் வாக்களித்துள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

166 இடங்களை திமுக கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பில் சொல்லப்பட்டாலும், இதில் மாற்றங்கள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன. திமுக கூட்டணியில் முதன்மை இடம் பிடித்துள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் செல்வாக்கு மிக்க வேட்பாளர்களை முன்னிறுத்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் திமுக கூட்டணிக் கட்சிகளான மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன. ஒருவேளை திமுக தலைமை, கூட்டணிக் கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட ஒப்புக் கொண்டால் 166 இடங்கள் என்பது ஐயமே.

மேலும், அமமுகவை அதிமுக கூட்டணியில் இணைக்கும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அப்படி இணைக்கப்பட்டால், அதிமுக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் திமுக கூட்டணிக்கு கிடைக்கும் இடங்கள் குறையும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

அமமுகவுக்கு சசிகலா வருகை பலமாக அமையும். சசிகலா வருகைக்குப் பிறகு அதிமுகவிலிருந்து சிலர் அமமுக பக்கம் தாவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி நடந்தால் அமமுக உறுதியாக ஒரு சில இடங்களில் வெற்றிபெறும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.