Show all

மக்களாட்சியின் அடிப்படைத் தன்மைகளைச் சிதைக்கும் போக்கு அதிகரிப்பதாக! இன்னொருஆட்சியர் பதவி விலகியுள்ளார்.

வருங்காலத்தில் மக்களாட்சியின் அடிப்படைத் தன்மைகளைச் சிதைக்கும் போக்கு அதிகரிக்கும். சவால்கள் மிகுந்ததாக இருக்கும். அரசு ஊழியராக இல்லாமல் வெளியே இருந்தேகூட மக்கள் பணி செய்யலாம்’ என்று தெரிவித்து பதவி விலகியுள்ளார் சசிகாந்த் செந்தில்.

20,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரு ஆளுமைப் பணியில் தனது குரலுக்கு மதிப்பேயில்லை என்கிற காரணத்தினால், இந்திய ஒன்றியப் பகுதியான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய கண்ணன் கோபிநாதன் இரண்டு கிழமைகளுக்கு முன் தன் பதவியை விட்டு விலகினார். 

தற்போது, தட்சின கர்நாடக மாவட்ட (மங்களூரு) ஆட்சியராக பணிபுரிந்து வந்த, சென்னையைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில், தன் பதவியை விட்டு விலகியுள்ளார். 

தமிழகத்தில், சென்னையைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில், திருச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்தவர். இந்தியக் குடியியல் பணித்தேர்வில் இந்திய அளவில் 9-வது இடம் பிடித்தவர்.

தன் பதவி விலகலுக்காக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நான் என் இந்திய ஆட்சிதுறை பணியை விட்டு விலகுகிறறேன். இந்தத் தருணத்தில் என் விலகலுக்கு யாரும் காரணம் அல்ல என்று மக்களுக்கு விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளேன். என் பணியை முழுமையாகச் செய்யாமல் பாதி வழியில் விலகிச் செல்வதற்காக தட்சின கர்நாடக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

பன்முகத் தன்மைகொண்ட மக்களாட்சியின் அடிப்படை கட்டமைப்புகள் சமரசம் செய்துகொள்ளப்படும்போது, அரசு ஊழியராகப் பணி புரிவது அறமற்றது. வருங்காலத்தில் மக்களாட்சியின் அடிப்படைத் தன்மைகளைச் சிதைக்கும் போக்கு அதிகரிக்கும். சவால்கள் மிகுந்ததாக இருக்கும். அரசு ஊழியராக இல்லாமல் வெளியே இருந்தேகூட மக்கள் பணி செய்யலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

நாற்பது அகவையுள்ள சசிகாந்த் முன்னதாக ரெய்ச்சூர், பெல்லாரி, மாவட்டங்களில் பணி புரிந்துள்ளார். மூன்றாண்டுகளுக்கு முன்னம் கர்நாடக கனிமத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார். பதவி விலகல் செய்துள்ள சசிகாந்தை, சமாதானப்படுத்தும் முயற்சியில் கர்நாடகாவை ஆளும் எடியூரப்பா அரசு ஈடுபட்டிருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,267.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.