சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்க, இந்த அறிக்கையை தமிழ் உள்ளிட்ட 22 இந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட டெல்லி அறங்கூற்றுமன்றம் ஆணையிட்டிருந்தது. அந்த ஆணையைக் கண்டு கொள்ளாமல் அறங்கூற்று மன்றத்தை அவமதித்துள்ளது நடுவண் பாஜக அரசு. 28,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் பாஜக அரசு கொணர்ந்துள்ள, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்க, இந்த அறிக்கையை தமிழ் உள்ளிட்ட 22 இந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்று டெல்லி அறங்கூற்றுமன்றம் ஆணையிட்டிருந்தது. அந்த ஆணையைக் கண்டு கொள்ளாமலும் அந்த ஆணைக்கு மறுப்போ பதிலோ கூட தெரிவிக்காமல், டெல்லி உயர் அறங்கூற்று மன்றத்தை அவமதித்துள்ளது நடுவண் பாஜக அரசு. நடுவண் பாஜக அரசு கொணர்ந்துள்ள, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2020 பற்றி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்க ஹிந்தி ஆங்கிலத்தில் மட்டும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது நடுவண் பாஜக அரசு. இந்த மதிப்பீட்டு அறிக்கையை தமிழ் உள்ளிட்ட 22 இந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டால்தான் அதுபற்றி சரியான கருத்துக்களை பொதுமக்களால் கூறமுடியும் என்று கூறி, அதற்கு உத்தரவிட வேண்டும் என சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர் விக்ராந்த் டோங்கட் என்பவர் டெல்லி உயர்அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த அறங்கூற்றுவர் சஞ்சீவ் சச் தேவா, கடந்த மாதம், 10 நாட்களுக்குள் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளிலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்றும் வெளிவந்த பத்து நாட்கள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க காலவரையறை அளித்தும் உத்தரவிட்டார். வேடிக்கை என்னவென்றால்- நடுவண் அரசுக்கு தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளிலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை மொழிபெயர்த்து வெளியிட அனுமதித்த கால வரையறையும் முடிந்து, பொதுமக்களுக்கு கருத்து தெரிவிக்க வழங்கப்பட்ட கால வரையறையும் நேற்றுடன் முடிந்து விட்டது. ஆனால் டெல்லி அறங்கூற்று மன்ற ஆணைப்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தமிழ் உள்ளிட்ட 22 இந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடவில்லை நடுவண் பாஜக அரசு. அதற்கான கால வரையறை நீட்டிப்பும் கோரவில்லை. இதனைத்தொடர்ந்து டோங்கட் சார்பில் டெல்லி உயர் அறங்கூற்று மன்றத்தில் நடுவண் பாஜக அரசுக்கு எதிராக அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறங்கூற்றுவர்கள், நடுவண் பாஜக அரசு மீது அவமதிப்பு நடவடிக்கை கோரும் மனுவுக்கு வருகிற திங்கட் கிழமைக்குள் பதில் அளிக்குமாறு நடுவண் பாஜக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் அரசியலமைப்பின் 8-வது அட்டவணைப்படி பிற மொழிகளிலும் அறிக்கை வெளியிடப்பட்டால் அது திறம்பட பரவுவதற்கு உதவியாக இருக்கும் என்றும், மொழிபெயர்ப்புக்கு மாநில அரசின் உதவியையும் கோரலாம் என்றும், இந்த மொழிபெயர்ப்புகள் நடுவண், மாநில சுற்றுச்சூழல் அமைச்சகங்களின் வலைத்தளங்களில் 10 நாட்களுக்குள் வெளியிடப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.