Show all

நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்! அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நிறைவடைந்தது

அயோத்தி இராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவை முன்னிட்டு, பெரும்பாலான கடைகள் மூடி இருக்கின்றன. நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள தேநீர் கடைகள் மட்டும் திறந்துள்ளன. அயோத்தி சாலைகள் அனைத்தும் பூக்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளன. மஞ்சள் மற்றும் காவி வண்ணத்தில் வீதி முழுவதும் வண்ணம் பூசப்பட்டுள்ளது.

21,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நிறைவடைந்தது. இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மோடி சரியாக நண்பகல் 12.44 மணிக்கு இராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டினார்.

அங்கே திரண்டிருந்த மக்கள் இராமன் வாழ்க! அனுமன் வாழ்க! முழக்கங்களை எழுப்பி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். வாழ்க அருள்மிகு இராமர் என்று ஹிந்தியில் கூறி தன் உரையை தொடங்கினார் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி. கூட்டத்தில் இருந்தவர்களை அவ்வாறே முழுக்கமிடக் கோரிய தலைமைஅமைச்சர் மோடி, ‘அயோத்தியில் மட்டும் இந்த முழக்கம் எதிரொலிக்கவில்லை, பேரண்டம் முழுவதும் எதிரொலிக்கிறது’ என்றார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியபோது, இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதற்காக தலைமைஅமைச்சர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். மேலும் அவர், 500 ஆண்டு கால போராட்டம், மக்களாட்சி வழியிலும், அரசமைப்புக்கு உட்பட்டும் முடிவுக்கு வந்திருக்கிறது, என்றும் தெரிவித்தார்.

அயோத்தியில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவிழா  தொடர்பாக ராகுல் காந்தி பகிர்ந்துள்ள கீச்சுவில் மனித இயல்புகளின் வெளிபாடு இராமர். இராம் என்றால் அன்பு, இராம் என்றால் அறங்கூற்று, இராம் என்றால் இணக்கம், என குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், அத்வானியால் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. ஆனால், உறுதியாக வீட்டிலிருந்தபடி நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருப்பார். சிலரை அழைக்க முடியவில்லை, சிலரால் வர முடியவில்லை. நிலைமை அவ்வாறாக இருக்கிறது என்றார்.

பெரும்பாலான கடைகள் மூடி இருக்கின்றன. நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள தேநீர் கடைகள் மட்டும் திறந்துள்ளன. அயோத்தி சாலைகள் அனைத்தும் பூக்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளன. மஞ்சள் மற்றும் காவி வண்ணத்தில் வீதி முழுவதும் வண்ணம் பூசப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்புக்கான அனைத்து நடைமுறைகளும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் பின்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், பெருங்கூட்டத்தை காண முடிகிறது. யாரும் முகமூடி அணியவில்லை. சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை.

முன்னதாக அங்கே உள்ள சிறு கோயிலில் வைக்கப்பட்டுள்ள குழந்தை இராமர் சிலை முன்பு விழுந்து வணங்கினார் தலைமைஅமைச்சர் மோடி.

நடுவண் அரசால் அமைக்கப்பட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்கிற அறக்கட்டளை இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் மாநில அரசும், அயோத்தி உள்ளாட்சி நிர்வாகமும் ஏற்பாடுகளில் பங்கேற்றுள்ளன.

அப்பகுதியில் உள்ள வீடுகளில் மக்கள் அனைவரும் விளக்குகளை ஏற்றுமாறு உத்திரப்பிரதேச மாநில அரசும் அடிக்கல் நாட்டு விழா ஒருங்கிணைப்பாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிக்கல் நாட்டு விழாவில் இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி, உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், அறக்கட்டளை தலைவர் கோபால் தாஸ் ஆகியோர்களுக்கு மேடையில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

நேபாளத்தில் இருந்து வரும் சில சாமியார்களும் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பார்கள் என அறக்கட்டளை உறுப்பினர் சம்பத் ராய் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அயோத்தி நிலத்தகராறு தொடர்பாக வழக்கு தொடர்ந்த ஹசிம் அன்சாரியின் மகன் இக்பால் அன்சாரியும் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

அயோத்தி இராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை பாஜக தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.

இந்தியத்தலைமை அமைச்சரும், உத்தர பிரதேச முதல்வரும்  அயோத்தி இராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொண்டது குறித்து கேள்வி எழுப்பி உள்ளது சிபிஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அமைப்பு. இது தொடர்பாக அவர்கள் பகிர்ந்துள்ள கீச்சுவில், இந்திய அரசிலமைப்பு மதத்தையும், அரசியலையும் கலக்கக் கூடாது என்பதை மிக தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது, என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அயோத்தி இராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு, ஹிந்துத்துவா கட்சியான சிவசேனை, தங்களுக்குப் போதிய முதன்மைத்துவம் தரப்படவில்லை என்பதாக வருத்தம் கலந்த பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

தெய்வக் கொண்டாட்ட விழாவான, அயோத்தி இராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழா, அரசுவிழா போலவும், பாஜகவின் மாநாடு போலவும் ஒருசேரக் காட்சியளித்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.