Show all

நன்றி பாராட்டுகிறோம் சோனு சூட்! ரஷ்யாவில் சிக்கி இருந்த தமிழ்நாட்டு மாணவர்கள் நாடு திரும்ப உதவியுள்ளார் சோனு சூட்

ஊரடங்கு காரணமாக மாஸ்கோவில் சிக்கிவிட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 90 பேர்களை மீட்டு இவர்களுக்காக சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து சோனு சூட் தமிழகம் கொண்டு வந்து இருக்கிறார்.

21,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: ஹிந்தி திரையுலகில் ஓரளவுக்கு பேரறிமுகமான பகைவன் நடிகர்தான் சோனுசூட். கொரோனா நுண்நச்சுத் தாக்குதல் தொடங்கியதில் இருந்தே இந்தியா முழுக்க மக்களுக்கு சோனு சூட் உதவி வருகிறார். அதிலும் தென்னிந்திய மக்களுக்கு அதிகமாக உதவி வருகிறார். 

இந்த நிலையில்தான் அவர் தமிழர்களுக்கும் இதே போல் உதவி செய்துள்ளார். அதன்படி ரஷ்யாவில் சிக்கி இருந்த தமிழர்கள் நாடு திரும்ப சோனு சூட் உதவி செய்துள்ளார். ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தங்கி இருந்த தமிழர்கள் இவர்கள். இவர்களில் பெரும்பாலான நபர்கள் மாணவர்கள். ரஷ்யாவிற்கு படிக்க சென்றவர்கள், ஊரடங்கு காரணமாக அங்கேயே சிக்கிக் கொண்டார்கள். மொத்தம் 90 பேர் மாஸ்கோவில் தங்கி இருந்தனர். இவர்கள் எல்லோரையும் மீட்டு சோனு சூட் தமிழகம் கொண்டு வந்து இருக்கிறார். இவர்களுக்காக சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து இருந்தார். எல்லோருக்கும் பயணசீட்டு செலவு எதுவும் இன்றி, தனி விமானம், மூலம் சென்னை கொண்டு வந்து இருக்கிறார். இன்று காலை எல்லோரும் சென்னை வந்தனர். 

சோனு சூட் சில தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் திரை உலகில்தான் முதலில் அறிமுகம் ஆனார். அதனால் இவருக்கு தமிழர்கள் மீது எப்போதும் அதிக மதிப்பு உண்டு. கடந்த நூறு நாட்களுக்கு மேலாக, இவர் நாடு முழுக்க மக்களுக்கு உதவி வருகிறார். ஊரடங்கு காரணமாக வெவ்வேறு இடங்களில் முடங்கிய பிற மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இவர் உதவினார். ஒரு பெரிய உதவிக் குழுவை உருவாக்கி உள்ளார். இதற்காக இவர் பேருந்து, லாரி என்று பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்து இருந்தார். தற்போது வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்ப தமிழர்களுக்கு உதவி உள்ளார். 

கடந்த மாதம், இதே கொரோனா ஊரடங்கை முன்னிட்டு மும்பையில் சிக்கிய 180 தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப சோனு சூட் உதவியதும் குறிப்;பிடத் தக்கது. அப்போது சோனு சூட்டுக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்தி மகிழ்ந்தார்கள் தமிழ்ப் பெண்கள். 

நடிகர் சோனு சூட், கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களைக் காப்பாற்ற பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஓய்வெடுக்க, தனது உணவகத்தை கொடுத்திருந்தார். 

பின்னர் 45 ஆயிரம் தொழிலாளர்களுக்கு அன்றாடம் உணவு கொடுத்து வந்தார். இந்நிலையில் மும்பையில் உள்ள சயான் கோலிவாடா பகுதியில் சிக்கிய தமிழர்கள், சொந்த ஊர் திரும்ப உதவி செய்யுமாறு நடிகர் சோனு சூட் அலுவலகத்தில் கோரிக்கை வைத்தனர். அவர் அந்த 180 தமிழர்களை விமானம் மூலம் அனுப்பி வைக்க முயற்சி செய்தார். ஆனால், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பேருந்து மூலம் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். 

முதல் பேருந்து வடலா டி.டி. பகுதியில் இருந்து புறப்பட்ட போது நடிகர் சோனு சூட் தேங்காய் உடைத்து அதை அனுப்பி வைத்தார். தங்களுக்கு உதவி செய்த சோனு சூட்டிற்கு தமிழ் பெண்கள் ஆரத்தி எடுத்து நன்றி கூறினர். அவர்களிடம் பத்திரமாக ஊருக்கு சென்று வாருங்கள் என்று அவர் கூறினார். நடிகர் சோனு சூட், விஜயகாந்தின் கள்ளழகர் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து, மஜ்னு, சந்திரமுகி, அருந்ததி, ஒஸ்தி, தேவி உட்பட பல படங்களில் பகைவனாக நடித்துள்ளார். தமிழ் தவிர, தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்த ஊரடங்கில் அவர் பொதுமக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் செய்த உதவிகள் பாராட்டிற்குரியன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.