Show all

கருத்துக் கணிப்பில் நடுவண் அரசுக்கு 37 மதிப்பெண். மாநில அரசுகளுக்கு 74 மதிப்பெண்! கொரோனா தடுப்பு பணியில் செயல்பாடுகள்

உயிர்க்கொல்லி நோயான கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டு வருவதை மக்கள் பாராட்டுகிறார்கள்.

27,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உயிர்க்கொல்லி நோயான கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டு வருவதை மக்கள் பாராட்டுகிறார்கள்.

நடப்பு நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நடுவண், மாநில அரசுகளின் செயல்பாடுகள் எப்படி உள்ளன? என்பது பற்றி நாடு முழுவதும் ஒரு இயங்கலை இதழ் ஆய்வு நடத்தி மக்களிடம் கருத்து கேட்டு அறிந்தவற்றை பதிவு செய்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடுவண்; அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தேவலாம் என்பதாக 37 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மாநில அரசுகளின் நடவடிக்கைகள் தேவலாம் என்பதாக 74 விழுக்காட்டு பேர்கள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.

21 விழுக்காட்டு பேர்கள் நடுவண் அரசின் செயல்பாடுகள் மிக மிக மோசம் என்பதாக வாக்களித்திருக்கிறார்கள்.
வெளிமாநில தொழிலாளர்கள் சிக்கலில் மத்திய அரசின் அணுகுமுறை தேவலாம் என்பதாக 29 விழுக்காட்டு பேர்களும், வெளிமாநில தொழிலாளர்களை மாநில அரசுகள் நடத்திய விதம் நன்றாக இருந்ததாக 76 விழுக்காட்டு பேர்களும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொடுமை என்று 78 விழுக்காட்டு பேர்கள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கால் ஏற்பட்ட பண நெருக்கடியை சமாளிக்க கடன் வாங்கியதாக, செல்பேசி கைக்கெடிகாரம் போன்றவற்றை விற்றதாக, நகைகளை அடகு வைத்ததாக, நிலத்தை விற்றதாக, நிலத்தின் மீது கடன் வாங்கியதாக 48 விழுக்காட்டு பேர்கள் கூறி இருக்கிறார்களாம்.

ஊரடங்கால் தங்கள் மாத வருமானம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக 71 விழுக்காட்டு பேர்கள் கூறி உள்ளனர்.

ஊரடங்கு அமலில் இருந்தாலும் உரிய நேரத்தில் அறுவடையை முடித்துவிட்டதாக 50 விழுக்காட்டு வேளாண் பெருமக்கள் தெரிவித்தாலும், அவர்களில் நான்கில் ஒருவர்தான் உரிய நேரத்தில் விளைபொருட்களை விற்க முடிந்ததாக தெரிவித்து இருக்கிறார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.