உழவர்களின் போராட்டத்தின் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறது. 13,தை,தமிழ்த்தொடராண்டு-5122: டெல்லியில் டிராக்டர் பேரணி சென்ற உழவர்களில் ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டு இந்தியக் கொடியையும், தங்கள் உழவர்கள் சங்கக் கொடியையும் அதில் ஏற்றினர். இதனால் செங்கோட்டையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. செங்கோட்டையைச் சுற்றி பேரணி நடத்திய உழவர்களை கலைக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தானுலங்கி (டிரேன்) படப்பிடிப்புக் கருவிகள் மூலம் செங்கோட்டையைச் சுற்றிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உழவர்கள் போராட்டம் எதிரொலியாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. இதற்கிடையே, டெல்லியின் முதன்மைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், உழவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறது. பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் வரை இந்த தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.