செயலலிதா நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார். 14,தை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள, தமிழக முன்னாள் முதல்வர் செயலலிதா நினைவிடத் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. தற்போது செயலலிதா நினைவிடப் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பார்வையிடுவதற்காக இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார். ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனைச் சார்ந்த கட்டமைப்புகள், 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில், ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. இந்த நினைவிடம் 15 மீட்டர் உயரம், 30.5 மீட்டர் நீளம் கொண்டது. 43 மீட்டர் அகலமும் கொண்டது. மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை போன்ற அமைப்பில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. நினைவிட வளாகத்தில் அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லாலான நடைபாதை, 1.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ள தரைப்பகுதி, புல்வெளி மற்றும் நீர்த்தடாகங்கள், சுற்றுச்சுவர், அழகூட்டும் மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், சிற்ப கலை வேலைப்பாடுகளும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு உள்ளது. அதில், செயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, அவர் செய்த சாதனைகள், மக்களுக்குச் செய்த சேவைகள், காணொளி மற்றும் கேளோலி காட்சி பிரிவு, ஜெயலலிதாவின் ஊக்க உரைகள், சிறுகதைகள், படங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அரசியல் தலைவர் ஒருவருக்கான நினைவிடத்தில் எண்ணிம முறையில் அருங்காட்சியம் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. செயலலிதா நினைவிட திறப்பு விழாவையொட்டி, காமராஜர் சாலையில், வார் மொமோரியலில் இருந்து கண்ணகி சிலை வரை காலை 06.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் சாலை, வி.கே.ஐயர் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் சந்திப்பு, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.