Show all

ஊரடங்கில் நாளை முதல் முன்னெடுக்க அனுமதிக்கப்படும் தளர்வுகள்!

மின்அனுமதி நடைமுறை இரத்து. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இரத்து. தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடும் போன்ற புதிய தளர்வுகளை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

15,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில், அரசுகள் அறிவித்த 7-வது கட்ட ஊரடங்கு இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. 

இந்த நிலையில், நடுவண் அரசு 4-வது கட்ட தளர்வுகளை அறிவித்தது. அதில், மாநிலத்துக்கு உள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்துக்குத் தடை இல்லை என்றும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு செப்டம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், செப்டம்பர் 7-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவை படிப்படியாக தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் புதிய தளர்வுகள் குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா நுண்நச்சுத் தொற்றை தடுப்பதற்காக, நடுவண் அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் நாளது 12,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5121 (25-3-2020) முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. 

தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் 30-9-2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தைக் கருத்தில் கொண்டும், நோய்த் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் நாளை முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே மின்அனுமதி இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம், தொடர்வண்டி மற்றும் இதர வாகனங்களின் மூலம் தமிழ்நாட்டுக்குள் வருவதற்கு மின்அனுமதி நடைமுறை தொடரும். 

அனைத்து வழிபாட்டு தலங்களிலும், பொதுமக்கள் காட்சிக்கு அனுமதிக்கப்படுகிறது. இதற்கென நிலையான வழிகாட்டு நடைமுறைகள் அரசால் வெளியிடப்படும். இதன்மூலம் ஒரு நாளைக்கு காட்சிக்கு வரும் அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வதுடன், வழிபாட்டு தலங்களில் உள்ளேயும் கருவகம் போன்ற இடத்திற்கும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனம் இரவு 8 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும்.

மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை நாளை முதல், நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

பெருநகர சென்னையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து அடுத்த திங்கட் கிழமை முதல் இதற்கென வகுக்கப்படும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

வணிக வளாகங்கள், அனைத்து காட்சி கடைகள் மற்றும் பெரிய கடைகள் 100 விழுக்காடு பணியாளர்களுடன், நடுவண் அரசின் குளிர்சாதன வசதி குறித்த வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயக்க தடை தொடரும்.

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். (தற்போது இரவு 7 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி)

அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. சிப்பச் சேவை இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தவிர்க்க இயலாத பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களைத் தவிர பிற பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய ஊக்குவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தங்கும் வசதியுடன் கூடிய உணவகங்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் பிற விருந்தோம்பல் சேவைகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.

உடற்பயிற்சி மற்றும் அனைத்து விளையாட்டு பயிற்சிகளுக்காக, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், விளையாட்டுத் திடல்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி மூன்று கிழமைகளுக்குப் பிறகு திறக்க அனுமதிக்கப்படுகிறது.

தற்போது 50 விழுக்காட்டுப் பணியாளர்களுடன் இயங்கும் அரசு அலுவலகங்கள், நாளை முதல் 100 விழுக்காட்டுப் பணியாளர்களுடன் இயங்கும். எனினும், தனியார் மற்றும் அரசு அலுவலகங்களிலும், தொழிற்சாலை போன்ற பணியிடங்களிலும், கொரோனா தடுப்பு அலுவலர் ஒருவரை தொடர்பு அலுவலராக நியமித்து, முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதையும், நோய்த் தொற்று உள்ளவர்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்கவும், அறிகுறி உள்ளவர்களை உடனுக்குடன் பரிசோதனை செய்வதை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வங்கிகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் 100விழுக்காடு பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்துக்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து மலை உலாத்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்லுவதை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் மின்அனுமதி பெற்று செல்ல அனுமதிக்கப்படுவர்.

திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு, இரத்து செய்யப்படுகிறது.

மாநிலங்களுக்கு இடையேயான தொடர்வண்டிப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் செயல்படும். எனினும், மாநிலத்துக்குள் பயணியர் ரெயில்கள் செயல்பட இரண்டு கிழமைகளுக்கு  அனுமதியில்லை. அதன் பிறகு, தமிழ்நாட்டுக்குள் பயணியர் தொடர்வண்டிகளை அனுமதிப்பது பற்றி, சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கப்படும்.

விமான போக்குவரத்து மூலம் பயணிக்கும் வெளிநாட்டு பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள், தொடர்வண்டி போக்குவரத்து மூலம் பயணிக்கும் பிற மாநில பயணிகள், தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனா நோய்த்தொற்றை கண்டறிதலுக்கான புதிய நடைமுறை வெளியிடப்படும்.

தற்போது நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து 25 விமானங்கள் தரையிறங்க அனுமதித்துள்ள நிலையில், இனி 50 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. இதுதவிர கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.

மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.

தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் அரசு எடுத்துவரும் இத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்கிறேன். நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது தேவைக்கேற்ப மேலும் தளர்வுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறி உள்ளார்.

இன்று வரை அரசுகள் முன்னெடுத்த ஊரடங்கால், கொரோனா முற்றிலும் பாதுகாக்கப்பட்டது என்றோ, நாளை முதல் ஊரடங்கு முற்றாக தளர்த்தப்பட்ட நிலையில், இனி கொரோனா பாதிப்பு இல்லை என்றே மக்கள் அறியாமையை முன்னெடுத்து விடக்கூடாது.

தமிழ்நாடு அரசு கொரோனா சிகிச்சையில் முழுமையாக, சிறப்பாக ஈடுபட்டது என்பது உறுதியான உண்மை. ஆனால் ஊராடங்கில் இரண்டு  அரசுகளும், சாதித்ததை விட அலைகழித்ததே அதிகம் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.