Show all

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலந்து கொள்வதில் கொரோனா சிக்கல்! 13வது இந்தியன் முதன்மைத் துடுப்பாட்டக் கழக 20போட்டியில்

13வது இந்தியன் முதன்மைத் துடுப்பாட்டக் கழக 20போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் ஆட்டத்தில் விளையாடாது எனத் தெரிகிறது.

14,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: பதின்மூன்றாவது இந்தியன் முதன்மைத் துடுப்பாட்டக் கழக (ஐபிஎல்) 20 துடுப்பாட்டப்  போட்டி 03,புரட்டாசி முதல் 25,ஐப்பசி வரை (செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை) ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது.
   
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் ஆட்டத்தில் விளையாடாது எனத் தெரிகிறது.

இந்தியன் முதன்மைத் துடுப்பாட்டக் கழகப் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்று விட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தவிர மற்ற அணிகள் பயிற்சியைத் தொடங்கி விட்டன.

போட்டிக்கு இன்னும் சில கிழமைகளே உள்ள நிலையில் போட்டி அட்டவணை வெளியிடப்படாத நிலை உள்ளது. இந்தியன் முதன்மைத் துடுப்பாட்டக் கழகப் போட்டியில் விளையாட இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது பல்வேறு சிக்கல்களை சந்தித்து உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ரெய்னா தனிபட்ட காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகி நாடு திரும்பி உள்ளார்.

மேலும் அணியில் உள்ள தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய 2 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர அணியில் உள்ள உதவியாளர்களில் 11 பேர் கொரோனாவுக்கு சிக்கி உள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக வீரர்களால் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. மேலும் ஒரு கிழமை தனிமைக்கு பிறகே பயிற்சியில் ஈடுபட முடியும்.

இந்தியன் முதன்மைத் துடுப்பாட்டக் கழகப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு வாகையர் மும்பை இந்தியன்ஸ்- முன்னாள் வாகையர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத திட்டமிடப்பட்டு இருந்தது.

தற்போது எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் விளையாடாது என்று தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையுடன் வேறு ஒரு அணி தொடக்க போட்டியில் விளையாடும். இதற்கு ஏற்ற வகையில் இந்தியன் முதன்மைத் துடுப்பாட்டக் கழகப் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா விலகியது பின்னடைவாக கருதப்படுகிறது. ரூ.11 கோடி ஊதியம் பெறும் அவருக்கு பதிலாக மாற்று வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யூசுப் பதான், ஹனுமா விகாரி, மனோஜ் திவாரி மற்றும் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த இவின் லீவிஸ் ஆகியோரது பெயர் அடிபடுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.