Show all

குட்டி பதினாறு அடி பாயுமா! விஜய்காந்த் பாதையில் கட்சியை முன்னெடுக்கிறார் விஜய் பிரபாகரன்

29,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் அப்பாவுக்குத் துணையாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் விஜயகாந்தின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் எழுந்தபோதுகூட முகநூலில் அவரது நேரலை செய்தி கட்சி தொண்டர்களை மட்டும் அல்லாமல் பலரையும் ஈர்த்தது. 

கட்சி சார்பில் நடக்கும் விழாக்களில் கலந்து கொண்டு வருவதுடன், தேமுதிகவை வளர்த்தெடுக்க இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்து வருகிறார். இந்நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தேமுதிக கொடியேற்று விழா மற்றும் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயபிரபாகரன் சொன்னதாவது: தேமுதிக தொடர்ந்து வளர்ந்து கொண்டே தான் இருக்கிறதே தவிர, இறங்கவில்லை. பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. சேவைக்காகவே வந்திருக்கிறேன். என் அப்பா என்னை கூப்பிட்டார். நான் வந்துவிட்டேன் என்றார். 

இதையடுத்து செய்தியாளர்கள், வரப்போகிற தேர்தலில் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினர். தேர்தல் கூட்டணி தொடர்பாக என் அப்பாவிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளேன். என் அப்பா சொன்னால் தேர்தல் பிரசாரத்திற்கு கண்டிப்பாக செல்வேன் என்று பதிலளித்தார். 

முன்னதாக திருமணத்துக்கு வந்திருந்த விஜயபிரபாகரனுக்கு, செண்டை மேளம், தப்பாட்டம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக வரவேற்பின்போது, சிறுவர்கள் ஆடிய தேவராட்டம் எல்லோரையும் வெகுவாக கவர்ந்தது. இதனையடுத்து, கட்சி கொடியை விஜயபிரபாகரன் ஏற்றி வைத்து கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,972.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.